கம்பத்தில் உடம்பை வில்லாய் வளைத்த மாணவர்கள்.. திகைத்த தேனி.. பரிசை குவித்தவர்களுக்கு பாராட்டு
தேனி: கம்பத்தில் நடைபெற்ற தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகளில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்கள் முன்னிலையில் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.
யோகா செய்பவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராகி, இதயம் பலம் பெறுகிறது.மேலும் நல்ல சீரான சுவாசம் கிடைப்பதோடு இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நம்முடைய பதற்றங்கள் நீங்கி மனம் அமைதியடைகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யோகாசனம் செய்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. இதன் காரணமாகவே மாணவர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தேனி மாவட்ட யோகாசன சங்கமும், கம்பம் ரிஷி யோகா அறக்கட்டளையும் இணைந்து இந்த போட்டிகளை நடத்தின. உத்தமபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மதுக்குமாரி ஐபிஎஸ் குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலர் சுகன்யா காந்தவாசன் தலைமை வகித்தார். 'கம்பம் ரிஷி யோகா' அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் துரை ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட யோகாசன போட்டிக்கு செந்தில்குமரன் தலைமையில் ஆசிரியர் குமரேசன், நாகராஜ், ராம்குமார், கிருஷ்ணவேணி, ஸ்ரீதா, சித்தேந்திரன், ரமணன், ராதேஷ் ஐயம்பெருமாள் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக செல்வராஜ், எஸ்கேவி சொக்கர் ராஜா, முருகானந்தம், பாரி, பாபு, கராத்தே செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில், 'சூப்பர் சீனியர்' பிரிவில் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமநாதபுரம் அக்ஷயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 'சீனியர்' பிரிவில் ஆண்டிபட்டி இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னமனூர் சிவகாமி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், 'ஜூனியர்' பிரிவில் உத்தமபாளையம் தி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மதுரை திருமங்கலம் கேபிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
'சப் ஜூனியர்' பிரிவில் கம்பம் சிஷ்யா அகடாமி பள்ளி மாணவர்கள், 'முன்னோக்கி வளைதல்' பிரிவில் கம்பம் பெப்பில்ஸ் நர்சரி பள்ளி, 'சிறப்பு பிரிவில்' கூடலூர் ஆர்.எஸ்.கே., நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, 'நின்ற நிலை' பிரிவில் கம்பம் புதுப்பட்டி ஃபேர்லேண்ட் பவுண்டேசன் பள்ளி, 'பின்னோக்கி வளைதல்' பிரிவில் கம்பம் டைனி பார்க் நர்சரி பள்ளி மற்றும் பழனி ஆண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

'அமர்ந்த நிலை' பிரிவில் உத்தமபாளையம் தாலுகா தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், 'பேலன்ஸ்' பிரிவில் மதுரை கெரென் மெட்ரிக் மேல்நிலை மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்கள் முன்னிலையில் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. முடிவில் தேனி மாவட்ட யோகாசன சங்க செயலாளர் மற்றும் மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவி ராம் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications