தேனியில் பெரும் சோகம்.. ஒரே நாளில் ஒரே ரயில்.. 2 இடங்களில் கோர விபத்து.. துடிதுடித்து இறந்த 2 பேர்
தேனி: ஒரே நாளில் ஒரே ரயில் இரண்டு இடங்களில் மோதி இரண்டு பேர் உயிரிழந்தனர். தேனியில் ஆய்வு ரயில் சென்றபோது, ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவர் மற்றும் பெண் ஒருவர் பலியாகினர்.
மதுரை-போடி இடையே அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்றதால் மதுரை-தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தேனி-போடி இடையே விரைவில் ரயில் சேவை தொடங்க உள்ளது. இதற்காக மதுரையில் இருந்து போடி வரை ரயில்வே தண்டவாளங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த ரயில் பாதையை ஆய்வு செய்வதற்காக 3 பெட்டிகளுடன் கூடிய ஆய்வு ரயில் நேற்று மதுரையில் இருந்து போடிக்கு வந்தது. அந்த ரயில் மாலை 5 மணியளவில் தேனி அண்ணாநகர் அருகில் 90 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்தபோது, தண்டவாளத்தை ஒரு பெண் கடக்க முயன்றார்.

விசாரணை
அப்போது அவர் மீது ரயில் மோதியது. இதில் அந்த பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சிறிது நேரம் ரயில் அங்கு நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ஆய்வுக்காக ரயில் போடியை நோக்கி புறப்பட்டுச் சென்றது. தகவல் அறிந்ததும் தேனி போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் அங்கு வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபனும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

ரயில்வே தண்டவாளம்
ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், ரயில் மோதி பலியானவர் கண்டமனூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்த கண்ணுச்சாமி என்பவரின் மனைவி லட்சுமி (வயது 45) என்பது தெரியவந்தது. அவர், தேனியில் தனது உறவினர் வீட்டுக்கு நேற்று வந்தார். பின்னர் கடைக்கு சென்று விட்டு, மதுரை சாலையில் இருந்து அண்ணாநகர் செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார், அப்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. உயிரிந்த லட்சுமியின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். லட்சுமி இறந்த தகவலை கேட்டு உறவினர்கள் துடிதுடித்து போய் கதறி அழுதனர்.

இளைஞர்
இதனிடையே ஆய்வை முடித்துக் கொண்டு அந்த ரயில் போடியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டது. மாலை 6.10 மணியளவில் தேனி ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் சென்று கொண்டு இருந்தது. தேனி தாமரைக்குளம் கண்மாய் கரையில் சென்றபோது இளைஞர் ஒருவர் மீது ரயில் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரண்டு பேர் பலி
சம்பவ இடத்துக்கு உடனே வந்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரியகுளம் வடகரையை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ராஜா (20) என்பதும், அவர் பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்ததாகவும் தெரியவந்தது. உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து ரயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் தேனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி ரயில் நிலையத்தில் இருந்து தேனி கலெக்டர் ஆபிஸ் வரை ரயில்வே பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அங்கு ஏராளமான வீடுகள் உள்ளன. அங்கு சிலர் தண்டாவளத்தை எந்த பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் கடப்பதால் இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications