தடதடக்கும் தேனி.. கடும் போட்டியில் 3 வேட்பாளர்கள்.. வெல்ல போவது யாரு?
அதிமுக, அமமுக இரு கட்சிகளுக்கு இடையே தேனியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தேனி: தமிழக மக்களே அதிகம் எதிர்பார்க்கும் தொகுதிதான் தேனி! இதற்கு காரணம் அதிமுகவும், அமமுகவும்தான்!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பில் களம் காணுகிறார். கட்சியின் உட்பூசல், மூத்த தலைவர்களின் அதிருப்தி, தொண்டர்களின் எரிச்சல் போன்றவற்றுக்கு நடுவே மகனை வேட்பாளராக்கி இருக்கிறார் ஓபிஎஸ்!
இதனால் வென்றாக வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார். இது அதிமுக அரசுக்காகவும் தன்மான பிரச்சனையாகவும் மட்டுமில்லை, அமமுக தலையெடுத்துவிடக்கூடாது என்பதற்காகவும்தான்.
போட்டா போட்டியில் திருமாவின் சிதம்பரம்.. ஜெயிக்க போவது யாரு.. கணிக்க முடியாத அளவுக்கு கடும் மோதல்
சமுதாய ஓட்டுக்கள்
துணை முதல்வரின் மகனே தோற்றுவிடக்கூடாது என்ற ஒற்றை வார்த்தைக்காக பக்கத்து தொகுதிக்கு கூட போய் பிரச்சாரம் செய்ய முடியாமல் ஓபிஎஸ் தேனியை தாண்ட முடியாமல் இருக்கிறார். ரவீந்திரநாத்தை பொறுத்தமட்டில், இவர் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். ஓரளவுக்கு தேனியில் இந்த சமுதாய ஓட்டு உள்ளது. இருந்தாலும் முழுக்க முழுக்க பண பலம், அதிகார பலத்தையே நம்பி களத்தில் வலம் வருகிறார்.
காங்கிரசின் ட்விஸ்ட்
அதேபோல, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் வேட்பாளர் என ட்விஸ்ட் வைத்தது காங்கிரஸ். ஈரோட்டில் விருப்பமனு தாக்கல் செய்த, பெரியாரின் பேரனுக்கு தேனியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டிய அவசியம் இதுவரை விளங்கவில்லை!
வெற்றி கிட்டுமா?
இதனால் ஜே.எம்.ஆரூண் கடுங்கோபத்தில் இருக்கிறாராம். ஏனெனில் அவர்தான் இந்த தொகுதியில் போட்டியிட சீட் கேட்டவர். மத்தபடி ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இங்கு வெற்றி கிட்டுமா என்பது சந்தேகம்தான். திமுகவின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஓரளவு ஓட்டு வங்கியை பெற முடியும் என்பதுதான் நிலைமை!
தங்க தமிழ்செல்வன்
தேனி பரபரப்பாக இன்று இருக்க காரணமே அமமுக வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன்தான். இவர்தான் அந்த கட்சியின் வேட்பாளர். கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். அதேபோல இங்கு கள்ளர் சமுதாய ஓட்டுக்களும் அதிகம். இதெல்லாம் இருந்தாலும் தனக்கு ஒத்த கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு ரெண்டு கண்ணுமே போய்விட வேண்டும் என்ற ரேஞ்சுக்கு ஓபிஎஸ் குடும்பத்தை நோக்கி காய் நகர்த்துகிறார்.
வாரி இறைக்கும் பணம்
அதாவது காங்கிரஸ் ஜெயிச்சாலும் விட்டுவிடுவார் போல இருக்கிறது, ஆனால் ரவீந்திரநாத் ஜெயித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். "தேனியில் தெரு தெருவாக ஓபிஎஸ் பணத்தை வாரி வாரி இறைக்கிறார்" என்று ஏற்கனவே இவர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
யார் வெல்வார்கள்?
இப்போது அதிமுக, காங்கிரஸ், அமமுக என தேனி மாவட்டமே அடிக்கிற வெயிலில் சேர்ந்து தகித்து கிடக்கிறது. இந்த மும்முனை போட்டியில் முந்துவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம்!