"திமுக ஆட்சியின் அவலங்கள்"-லிஸ்ட் போட்டு விளாசிய ஓபிஎஸ்! சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தேனி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசார பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திமுக அரசைக் கடுமையாகச் சாடி பேசினார்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அதிமுக
கடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களைப் போலவே இந்த முறையும் அதிமுக- பாஜக கூட்டணி இணைந்தே போட்டியிடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இடப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் இரு கட்சிகளும் தனித்துக் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டன. அதன்படி மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

ஓபிஎஸ்
கடந்த அக். மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்திருந்தது. இந்த முறை பொங்கல் பரிசு, நீட் விவகாரத்தை வைத்து பிரசாரத்தை முன்னெடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதனிடையே தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திமுக அரசைக் கடுமையாகச் சாடி பேசினார்.

நிர்வாக திறமையின்மை
இது தொடர்பாக அவர் பேசுகையில், "அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சியின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். 10 மாதங்களுக்கு முன் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, விரைவாக மக்களின் அதிருப்தியைப் பெற்றுள்ளது. திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் பொதுமக்கள் மிக மோசமான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் மழை, வெள்ளம், கொரோனா போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்ட போது, நாம் மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பான பணியை ஆற்றி உள்ளோம்.

கொரோனா பரவல்
குறிப்பாக, கொரோனா பரவ தொடங்கிய காலகட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 900 இஸ்லாமியர்களை டெல்லியில் இருந்த அழைத்து வர ஒரு சிறப்பு ரயிலையே ஏற்பாடு செய்தோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவும் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், இப்போது திமுக அரசு கொரோனா பரவலை எப்படி கையாள்கிறது?

திமுக ஆட்சியின் அவலங்கள்
திமுக அரசு பொதுமக்களிடம் சென்று, எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்கள் வழங்கிய பொங்கல் பரிசின் தரத்தை நாடே அறியும். அதிமுக ஆட்சியில் மக்கள் நலனைக் காக்க நாம் என்ன செய்தோம். இப்போது திமுக அரசு என்ன செய்கிறது என்பதை நாம் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். திமுக ஆட்சியின் அவலங்களை வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குகளைப் பெற வேண்டும்.

எம்ஜிஆர் - ஜெயலலிதா
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அரசு தான் தமிழ்நாட்டிற்குப் பொற்கால ஆட்சியை அளித்துள்ளது. இதை மக்களும் தெளிவாகத் தெரிந்து கொண்டனர். திமுக ஆட்சி மீது ஏற்கனவே மக்களே மோசமாக விமர்சித்து வருகின்றனர். நாம் சரியான முறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சம். கட்சியின் வெற்றிக்கு முழு அர்ப்பணிப்புடன் அனைவரும் பாடுபட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications