அடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு!
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு என செய்தி வெளியானதை தொடர்ந்து அப்படி ஏதும் அறிவிப்பு வெளியாகாததால் அங்கு வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்துள்ளது. தற்போது 11 மணி நேர நிலவரப்படி 20.1 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளது.
தங்கதமிழ்ச் செல்வனின் சட்டசபைத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அத்தொகுதிக்கு தற்போது மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.
ஆண்டிப்பட்டி சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் ஜெயக்குமாரும், திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் போட்டியிடுகின்றனர்.

பணப்பட்டுவாடா
இந்த நிலையில் தேர்தலையொட்டி பணப்புழக்கம் நடைபெறும் என்பதால் தேர்தல் அதிகாரிகளும் வருமான வரித் துறையினரும் ஆங்காங்கே சோதனை நடத்துகின்றனர். அது போல் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.

பணம் பறிமுதல்
இதையடுத்து அங்கு காவலர்கள் சோதனை செய்ய சென்றனர். அப்போது அவர்களை அமமுகவினர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது போலீஸார் 4 முறை வானத்தை நோக்கி சுட்டனர். அங்கு கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இடைத்தேர்தல் ரத்து
இந்த நிலையில் வேலூரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அது போல் ஆண்டிப்பட்டியிலும் சட்டசபை இடைத்தேர்தல் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

வரிசையில்...
இதையடுத்து வேட்பாளர்கள் கலக்கம் அடைந்தனர். இந்த நிலையில் அதுபோன்ற எந்த அறிவிப்பும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று காலை வாக்காளர்கள் 7 மணிக்கு ஆண்டிப்பட்டி வாக்குச் சாவடியில் வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து அங்கு விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருவதால் வேட்பாளர்களும் வாக்காளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications