என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை
தேனி: என்னை முதல்வராக்கினால் பெண்களுக்கு ரூ 1 லட்சம் தருவேன் என ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேசியது சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் அவர் மீது திமுக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறதாக சொல்லப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதி திமுக எம்எல்ஏ மகாராஜன். இவர் அண்மையில் கடமயிலம் ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது, "முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு ரூ 5000 கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ரூ 10 ஆயிரம் தருவதாக சொல்கிறார்.

நான் சொல்கிறேன், என்னை முதல்வராக்கினால் மகளிருக்கு மாதம் ரூ.1 லட்சம் உதவித்தொகை தருவேன் என பேசியிருந்தார். இந்த பேச்சு சமூகவலைதளங்களில் வைரலானது. இது திமுகவினருக்கே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மேலும் இவரது இந்த பேச்சை கட்சி தலைமைக்கு தேனி மாவட்ட திமுக நிர்வாகிகள் கொண்டு சென்றனர். மகாராஜன் ஏற்கெனவே இரு முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கியவர். முன்பு ஒருமுறை தேனி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் எம்பி தங்கதமிழ்ச் செல்வனுடன் ஆட்சியர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை கட்சித் தலைமை கண்டித்தது.
அதன்பிறகு வருசநாடு அருகே மண்ணூத்து மலை கிராமத்தில் பெண்களிடம் பேசுகையில், "ஓசி பஸ்ஸில் ஏறி ஜாலியா ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, தேனி சென்று வாருங்கள். உங்கள் வீட்டுக்காரர் சமைத்து வைப்பார்" என அவர் பேசியிருந்ததும் சர்ச்சையானது. இதையடுத்து அவரை மீண்டும் அழைத்த கட்சித் தலைமை கடுமையாக எச்சரித்தது.
இந்த நிலையில் "என்னை முதல்வராக்கினால் பெண்களுக்கு ரூ 1 லட்சம் தருவேன்" என பேசி மூன்றாவது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் திமுகவினர், மகாராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு வருகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் ஆண்டிப்பட்டி தொகுதியில் இந்த சர்ச்சை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் கோட்டையாக உள்ள ஆண்டிப்பட்டியில் கடந்த இரு முறை திமுகவை சேர்ந்த மகாராஜன் ஜெயித்திருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலின் போதும் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போதும் மகாராஜன் வென்றுள்ளார். இந்த நிலையில் இந்த முறை அவருக்கு சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர். ஜெயலலிதா ஆகியோர் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications