வீடு, நிலம் வைத்து சொத்து அடமான கடன்.. விரிக்கப்படும் பெரிய வலை.. சிக்கினால் மொத்தமாக போய்விடும்
தேனி: இன்றைக்கு தங்க நகை இல்லாத பலர் வீடு அல்லது சொத்து பத்திரங்களை அடகு வைத்து கடன் பெறுகிறார்கள்.. ஆனால் அப்படி சொத்து பத்திரங்களை அடகு வைத்து கடன் வாங்க வங்கிகளுக்கு செல்ல வேண்டும். வங்கிகள் கேட்கும் பல்வேறு ஆவணங்கள் பற்றி சரியாக விவரங்கள் தெரியாமல் கடன் வாங்க முடியாத நிலையில் உள்ளார்கள். இதை பயன்படுத்தி சில தனியார் பைனான்ஸ் நிறுவனத்தினர் சொத்துக்களை பறிக்கும் நோக்கில் செயல்படுகிறார்கள். இதுபற்றி பார்ப்போம்.
தங்க நகை இருந்தால் அடகு வைத்து பணம் பெறுவது இருக்கும் கடன் ரிஸ்கில் சிறிய ரிஸ்க் ஆகும். அதே நேரம் உங்களுக்கு நல்ல சம்பளம் தருகிறார்கள். மாதம் மாதம் உறுதியான மாத ஊதியம் கிடைக்கும். நல்ல வேலையில் உள்ளீர்களா.. வேலைக்கு பிரச்சனை இல்லை என்றால் தனிநபர் கடன் கூட வாங்கலாம்.. அதேபோல் நல்ல ஊதியம் இருக்கிறது. ஆனால் தங்கமும் இல்லை.. தனிநபர் கடன் வாங்க முடியாத நிலை இருக்கிறது .

ஒரு அவசர தேவைக்கு உடனே பணம் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது என்றால், சிலர் வீட்டை அடகு வைத்து அல்லது நிலத்தை அடகு வைத்து பணம் வாங்குவார்கள். அவர்கள் பொதுவாக வங்கியை மட்டுமே நாடுவார்கள். அதேநேரம் தனிநபர் கடன் கிடைக்காதவர்கள், தங்க நகை இல்லாதவர்கள், வறுமையில் வாழும் மக்கள், சொத்தை வைத்து தான் கடன் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. முன்பெல்லாம் கடன் நம்பிக்கையின் அடிப்படையில் தரப்பட்டது. இப்போது சொத்தை வைத்து தான் கடன் தருகிறார்கள்.
அதுவும் எப்படி என்றால், உங்களிடம் 10 லட்சம் அல்லது 20 லட்சம் மதிப்புள்ள சொத்து இருக்கும். ஆனால் உங்களுக்கு அவசர தேவையாக 2 முதல் 4 லட்சம் தான் தேவைப்படும். அதை வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கு வங்கிகளை பொறுத்தவரை நிலையான வருமானம் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வாங்குவது கடினம்.
இந்த சூழலை பயன்படுத்தி சில தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள், சில கந்து வட்டி நபர்கள், அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க சொத்தை அவர்கள் பெயரில் கிரையம் செய்து கொடுக்குமாறு கூறுகிறார்கள். ஏனெனில் சொத்தை அடமானம் வைத்து தனியாரில் கடன் பெறுவது என்பது சட்டப்பூர்வமாக நிறையை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி சொத்திற்கு கடன் கொடுக்க நிறைய தகுதிகள் உள்ளன. இதன் காரணமாக கடனுக்கு ஈடாக சொத்தை கிரயம் செய்து கொடுக்க சொல்கிறார்கள்.. அந்த செலவை கடன் வாங்குபவர்களே ஏற்க வேண்டுமாம்.
அடுத்ததாக கடன் தொகையையும், வட்டியையும் சரியாக செலுத்தினால், பின்னாளில் சொத்தை மீண்டும் கிரயம் செய்து தருகிறார்கள். அதுவும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் இப்படி செய்யப்படுகிறதாம். ஒருவேளை கிரயம் வாங்கிய பின்னர், கடனை கட்டாமல் போனால் சொத்து அவர்களுக்கே போய்விடும். ஏன் கடனை சரியாக கட்டினால் கூட, சொத்தை அவர் விரும்பி கிரயம் செய்து கொடுத்தால் தான் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும்.
இப்போது கடனை கொடுத்தால் திரும்ப வாங்குவது சவாலாக உள்ளதால் இப்படி முறையை பின்பற்றுவதாக கூறுகிறார்கள் சில பைனான்சியர்கள்.. எனவே கடனுக்கு சொத்தை அடமானம் வைக்க போகிறீர்கள் என்றால், இதுபோன்ற வலையில் சிக்கி கொள்ளாதீர்கள்.. அதேபோல் சொத்தை அடமானம் வைக்க போகிறீர்கள் என்றாலும் உங்களுக்கு நிலையான வருமானம் உள்ளது. மாதம் மாதம் கடனை கட்ட முடியும் என்றால் மட்டுமே வாங்க வேண்டும்.. இல்லாவிட்டால் சொத்தை மறக்க வேண்டிய நிலை வரும்.












Click it and Unblock the Notifications