"பாஜக மண்டையில கொட்டும்னு தான் எடப்பாடி அத செஞ்சாரு" தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு!
தேனி: சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்ததற்கான காரணம் குறித்து திமுக நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்க திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கு ஏற்ப 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார். அதேபோல் தேனி மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
உடல் நடுங்குது..கடப்பாரையை முழுங்கிட்டு கசாயம் குடிச்சாங்க.. சட்டசபையில் ஸ்டாலின் சொன்ன சொலவடை
ஓபிஎஸ் பற்றி விமர்சனம்
இந்தக் கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், பெரியகுளத்தில் பிறந்த ஓ பன்னீர்செல்வம், முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர் என்று இருந்தவர், இன்று எந்தப் பதவியும் இல்லாமல் இருக்கிறார் என்று விமர்சித்தார்.
தேனியில் வெற்றி
தொடர்ந்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் மீதும், திமுக ஆட்சி மீதும் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திட்டமிடுதல், நிறைவேற்றுதல், பொருளாதார மேம்பாடு என்று முதலமைச்சர் முக ஸ்டாலினின் உழைப்பிற்கு மக்களால் மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும். குறிப்பாக தேனி நாடாளுமன்றத் தொகுதியை வென்றாக வேண்டும்.
திமுகவின் கோட்டை
ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் எந்த நல்லது, கெட்டதற்கும் வருவதில்லை. இவ்வளவு ஏன் மக்களுக்கு நன்றி கூறுவதற்கு கூட வருவதில்லை. ஆனால் தேர்தல் வந்தால் பெட்டி கொடுத்து வெற்றிபெறுகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக நாடாளுமன்றத் தேர்தல் இருக்க வேண்டும். தேனி மாவட்டம் திமுகவின் கோட்டை என்று நிரூபிக்க வேண்டும்.
இபிஎஸ் ஏன் வெளிநடப்பு?
அதற்காக 10 பேர் கொண்ட பூத் கமிட்டியை அமைத்தாக வேண்டும். விரைவில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் ஆள்சேர்ப்பு முகாம் நடக்கவுள்ளது. அதில் திமுக நிர்வாகிகள் பயன்படுத்தி, புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். அண்மையில் சட்டமன்றத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வெளிநடப்பு செய்தது.
ஏனென்றால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி இருந்தால், அதனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேச வேண்டிய நிலை வரும். அப்படி ஆதரித்து பேசினால் பாஜக மண்டையில் கொட்டும். அதனால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார் என்று விமர்சித்தார்.