எப்படி இருந்த இடம் இப்படி ஆகிவிட்டதே... தேனியில் உற்சாகமிழந்த ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள்..!
தேனி: அதிமுகவில் நடந்து வரும் அக்கப்போருக்கு இடையே சென்னையில் இருந்து புறப்பட்டு தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு சென்றிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னையில் இருந்து தனது ரேஞ்ச் ரோவர் கார் மூலம் சாலைவழியாக பயணம் மேற்கொண்ட அவருக்கு வழியில் எந்த இடத்திலும் அதிமுகவினர் வரவேற்பு அளிக்கவில்லை.
இதைவிட அவரை பெரியகுளத்தில் வரவேற்பதற்காக திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் யார் முகத்திலும் உற்சாகமில்லை.

யார் பெரியவர்?
அதிமுகவில் யார் பெரியவர் என்ற பலப்பரீட்சை நடந்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் செல்வாக்கை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழுவுக்கு பிறகு வெகுண்டெழுந்த ஓ.பன்னீர்செல்வம் மூன்று நாட்களாக சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இருந்தவாறு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

சிறப்பு வழிபாடு
புதன்கிழமை மதியமே தேனிக்கு புறப்பட இருந்த அவர், அக்டோபர் 2-ம் தேதி காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பதால் தானும் பங்கேற்க வேண்டி தனது பயணத் திட்டத்தை மாற்றியமைத்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி கோயிலின் சிறப்பு குறித்து ஆதரவாளர் ஒருவர் எடுத்துக்கூறியதுடன், ஒரு எட்டு வந்துட்டுப் போங்க நினைத்தது நடக்கும் என அழைப்பு விடுத்திருக்கிறார். அதன் பேரில் புதன்கிழமை மாலை அங்கு சென்ற அவர் மனமுருகி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கார் மூலம்
இன்று ஆளுநர் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சென்னை பசுமை வழிச்சாலையில் மதிய உணவை முடித்துக்கொண்டு சாலை மார்க்கமாக தனது ரேஞ்ச் ரோவர் காரில் தேனிக்கு புறப்பட்டார் ஓ.பி.எஸ். சென்னையில் இருந்து தேனி செல்லும் வழியில் செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், என பல மாவட்டங்கள் இருந்தாலும் அங்கு எங்குமே ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு தரப்படவில்லை.

உற்சாகமின்றி
இந்நிலையில் இரவு சுமார் 9 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டை சென்றடைந்த ஓ.பி.எஸ்.க்கு உற்சாகமிழந்த நிலையில் ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். ஓ.பி.எஸ். ஊருக்கு வருகிறார் என்றால் களைக்கட்டி காணப்படும் அவரது வீடு களையிழந்து காணப்பட்டது. தன்னை வரவேற்க வந்தவர்களுடன் ஒரு அரைமணி நேரம் சந்தித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார் ஓ.பி.எஸ். இதனிடையே நாளை மற்றும் அடுத்தடுத்த நாட்களில் ஓ.பி.எஸ். மிக முக்கிய ஆலோசனை நடத்தக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications