ஆர்கே நகரில் ஓட்டுக்கு 10 ஆயிரம் கொடுத்தாங்க.. எங்க ஆட்கள் கொடுத்ததை தடுத்தேன்.. டிடிவி ஓபன் டாக்
தேனி: தேனியில் பிரசாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 10 ஆயிரம் கொடுத்தார். எங்க ஆட்கள் கொடுத்ததை தடுத்தேன் என்று கூறினார். பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடுகிறார்.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரனே போட்டியிடுகிறார். திமுகவில் தங்க தமிழ்செல்வனும், அதிமுகவில் விடி நாராயணசாமியும் போட்டியிடுகிறார்கள்.

டிடிவி தினகரன் போட்டியிடுவதால் தேனி தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் அனல் பறக்கும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன் பேசியதாவது:-
70 ஆயிரம் பணம் கொடுத்தார்கள்: ஆர்கே நகரில் திமுகவை டெபாசிட் இழக்க வைத்த சின்னம்.. பழனிசாமி கம்பெனி ஓட்டுக்கு பத்தாயிரம் கொடுத்தார்கள். அப்போதும் அவர்களுக்கு ஓட்டு போடவில்லை. எனக்குத்தான் ஓட்டு போட்டார்கள். தேர்தல் முடிந்து நான் நன்றி சொல்ல போன போது தாய்மார்கள் எனக்கு ஆரத்தி எடுத்தார்கள்.
ஆரத்தி எடுத்த ஒரு மீனவ தாயிடம் உங்கள் வீட்டில் எத்தனை ஓட்டு என்று கேட்டேன். அவர்கள் நான் ஜெயித்து விட்டேன் என்பதை புரிந்து கொண்டு.. 7 பேர்... 70 ஆயிரம் பணம் கொடுத்தார்கள். இதெல்லாம் யார் பணம்.. எங்கள் பணம் எங்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். பழனிசாமி என்ன அவர் அப்பா வீட்டு பணத்தையா கொண்டு வந்து கொடுத்தார் என்று கேட்டார்கள்...
பணம் கொடுப்பதை தடுத்தேன்: முதல்வராக்கியதே நீங்கள்தான்.. உங்களுக்கு துரோகம் பண்ணியவர்களை விடுவோமா.. நாங்கள் என்றார்கள்... டோக்கன் கொடுத்தேன் என்று பொய் சொல்கிறார்கள்... மளிகை கடையிலேயே 500 ரூபாய்க்கு சாமான் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். கடன் அன்பை முறிக்கும் என்று சொல்லிவிடுவார்கள்... அப்படி இருக்கும் போது, ஒட்டுக்கு 10 ஆயிரம், 20 ஆயிரம் கொடுத்தார்கள்..
இங்கே சில பேர் வருகிறார்கள் பாருங்கள்.. நம்ம கட்சியில் முகவரி வாங்கிட்டு வேற கட்சியில் இருந்து போட்டியிடுகிறார்களே அவர்களை போல சில பேர்.. பணம் கொடுத்து விட்டார்களே என்று பயத்தில் போய் கொடுத்து இருக்கிறார்கள். அதை தெரிந்த உடனே நான் நிறுத்திக்கொண்டேன்..என்னை பாதிக்கும் என்று.. எனக்கு தெரியாமல் கொடுத்தால் கூட என் மேல தான் கேஸ் போடுவார்கள்..
டிடிவி தினகரன் தான் வேண்டும் என்று: அதனால்தான் நான் சத்தம் போட்டு கொடுக்க வேண்டாம் என்று நிறுத்தினேன். அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு தினமும் வேலைக்கு சென்றால் தான் 500 ரூபாய் 1000 ரூபாய் கிடைக்கும். அப்படிப்பட்ட மக்கள் 10 ஆயிரத்திற்கு எல்லாம் மயங்கவில்லை. டிடிவி தினகரன் தான் எங்களுக்கு வேண்டும் என்று ஓட்டு போட்டார்கள்.. ஜெயலலிதாவை நாங்கள் கொன்று விட்டதாக எங்கள் மீது பழிவேறு போட்டார்கள்..
ஜெயலலிதா மறைவுக்கு பின்: எல்லா பழியையும் துடைத்து என்னை வெற்றி பெற வைத்தார்கள்.. இவ்வாறு அவர் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவை டிடிவி தினகரன் தோற்கடித்தார்.
ஆர்கே நகரில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வி அடைந்தார். அதிமுக இரண்டாம் இடத்தையும் திமுக டெபாசிட்டையும் பறிகொடுத்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றியதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன. எனினும், டிடிவி தினகரன் இதை திட்டவட்டமாக மறுத்தார்.












Click it and Unblock the Notifications