தேனியில் மாஸ் காட்ட நினைத்த எடப்பாடி.. தமாஷ் ஆன மீட்டிங்! காலி சேர்கள் முன் உரையாற்றும் நிலை
தேனி: ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் பிரம்மாண்ட மாநாடு போல கூட்டத்தை திரட்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது 90% கூட்டம் எழுந்து சென்றுவிட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர்களின், சில சொதப்பல்களால் காலி சேர்கள் முன்பு பேசும் நிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி தள்ளப்பட்டார் என்கின்றனர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மதுராபுரியில் நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக இது போன்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

ஆனால் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அதற்கு காரணம் பெரியகுளம் பகுதியை ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவையும் தாண்டி இந்த விஷயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
பிரம்மாண்டமான மாநாடு போல இந்த பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதை அடுத்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் அங்கு முகாமிட்டு ஏற்பாடுகளை செய்தனர். நேற்று கூட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாகவே அதிமுக தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அந்த கூட்டத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கினர்.
அதிமுகவில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தனக்குத் தான் ஆதரவு என்பதை காட்டிக் கொள்வதற்காகவே ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். சொன்னது போலவே மாநாடு போலவே பொதுக் கூட்டம் பிரம்மாண்டமாக அமைந்தது. இதற்காக பெரியகுளத்தைச் சுற்றி ஆண்டிப்பட்டி, கம்பம், திண்டுக்கல், மதுரை மாவட்டம் சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது கிட்டத்தட்ட 70 சதவீதம் சேர்கள் காலி ஆகின. எடப்பாடி பழனிச்சாமி பேசப்பேச அந்த கூட்டமும் மறைந்து போனது. கிட்டத்தட்ட 10,000 சேர்கள் போடப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ஆயிரம் சேர்கள் போடும் அளவுக்கு கூட்டம் வந்தது என்னவோ உண்மை தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பேச தொடங்கிய போது கூட்டம் முற்றிலும் தொலைந்து போயிருந்தது. காலி சேர்கள் முன்னால் உரை ஆற்ற வேண்டிய நிலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி தள்ளப்பட்டார்.
அதிமுக உட்கட்சி விவகாரங்கள், ஓ பன்னீர்செல்வம் விவகாரம், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, திமுக என அவரது பேச்சு சிறப்பாகவே அமைந்தது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் கூட்டம் நடப்பதால் மிகவும் ஆவேசமாக அதிக நேரம் பேசினார் எடப்பாடி. ஆனால் நான்கு மணிக்கு கூட்டம் எனக் கூறி பொதுமக்களை அதிமுகவினர் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அழைத்து வரப்பட்ட போது கடும் வெயில் அடித்த நிலையில் 6:30 மணிக்கு தான் எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.
அதற்குள்ளாக குழந்தைகளை கவனிக்க வேண்டும், சமைக்க வேண்டும் உள்ளிட்ட காரணங்களை கூறி பெண்கள் செல்ல ஆரம்பித்து விட்டனர். முன்னாள் அமைச்சர்கள் பேசிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி இறுதியாக பேச வரும்போது மழை பெய்வது போல இருந்ததால் இருந்த கூட்டமும் காலியானது. தற்போது அந்த வீடியோக்களை எடுத்து மாஸ் காட்ட நினைத்த எடப்பாடி தமாஷ் ஆகிவிட்டார் என பரப்பி வருகின்றனர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications