இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. தக்காளி விலை பாருங்க! தேனி மக்கள் மட்டும் கவலையில் இருக்காங்களே? ஏன்
தேனி: தமிழகத்தில் தக்காளி விலை சமீப காலமாகவே பெரும் கிலியை தந்துவிட்டது.. ஓரிரு நாளில் ஏறும் தக்காளி விலை, உடனடியாக குறைவது வாடிக்கையாகும்.. ஆனால், கடந்த 3 மாதங்களாகவே தக்காளி விலை அதிகரித்தபடியே இருந்தன.. இப்போதுதான் விலையில் மாற்றம் தென்பட துவங்கியிருக்கின்றன.. இது இல்லத்தரசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது..
வழக்கமாக, மழைக்காலம், குளிர்காலம் என்றாலே தக்காளி உட்பட காய்கறிகளின் விலை உயர்ந்துதான் காணப்படும்..

காரணம், அதிகப்படியான ஈரப்பதத்தால் வேர் அழுகல், இலைக்கருகல் நோய் ஏற்பட்டு மகசூல் பெருமளவு பாதிக்கப்படுகிறது... பூக்கள் உதிர்வதாலும், பழங்கள் விரைவில் அழுகி விடுவதாலும் சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து விலை உயர்கிறது.
பருவ நிலை மாற்றம் - விலை உயர்வு
இதுபோக போக்குவரத்து சிக்கல்களும் உள்ளன.. குளிர்காலத்தில் தக்காளி பழங்கள் மெதுவாக பழுப்பதும் இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும்.. எப்போதுமே ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் அறுவடை அதிகரித்து வரத்து அதிகமானால் மட்டுமே தக்காளியின் விலை குறையும்..
கடந்த செப்டம்பர் மாதம் முதலே தக்காளி விலை உச்சத்துக்கு போனது.. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.. உச்சத்திலிருந்து தற்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.... வரத்து அதிகரிப்பு, விளைச்சல் மாற்றம் மற்றும் காலநிலை தாக்கம் எனப் பல்வேறு காரணங்களால் மாவட்டத்திற்கு மாவட்டம் விலை நிலவரம் மாறுபட்டு காணப்படுகிறது.
சென்னை கோயம்பேடு, கிருஷ்ணகிரி
ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது... கடந்த 3 மாத காலங்களில் பெய்த பரவலான மழை, வெளிமாநில வியாபாரிகளின் அதிகப்படியான கொள்முதல் காரணமாக, சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து 30 லாரிகளாக குறைந்திருந்தது.
இதனால் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால், இப்போது வரத்து படிப்படியாக அதிகரித்து, தினசரி 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி குவிகிறது... இதன் விளைவாக மொத்த விற்பனையில் கிலோ தக்காளி 6 ரூபாய்க்கும், சில்லரை விற்பனையில் 15 ரூபாய்க்கும் சரிந்துள்ளது...
அதேபோல கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளிலும் தக்காளி விலை சரிவை சந்தித்துள்ளது.. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், பாகலூர், சூளகிரி மற்றும் உத்தனப்பள்ளி போன்ற பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சாலையில் கொட்டப்பட்ட தக்காளிகள்
கடந்த வருடம் விலை கிலோ 100 ரூபாயை தாண்டியதால், இந்த வருடம் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் சாகுபடியில் ஈடுபட்டனர்... தற்போது அறுவடை சீசன் உச்சத்தில் இருப்பதால், மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து கட்டுக்கடங்காமல் குவிந்து கொண்டிருக்கிறது..
வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கிலோ 8 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள்.. உழவர் சந்தைகளில் 15 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், பறிப்புக்கூலி, போக்குவரத்து செலவு கூட கிடைக்காததால், விவசாயிகள் தக்காளியை சாலைகளில் கொட்டித் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருவதையும் இங்கு நாம் கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது...
தேனி மாவட்ட கவலை
ஆனால் தேனி மாவட்டத்தில் மட்டும் தக்காளி விலை இன்னும் அதிகமாகவே உள்ளதாம்.. காரணம், தேனி, வருஷநாடு, பெரியகுளம் பகுதிகளில் நிலவிய காலநிலை மாற்றம், சூறாவளி காற்று, பயிர்களை தாக்கிய இலைக்கருகல் நோய் போன்றவை எல்லாமே சேர்ந்து மகசூலை கடுமையாக தாக்கி விட்டது..
அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வரத்து இல்லாததால், இங்கு ஒரு கிலோ தக்காளி 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து தக்காளி கொண்டு வரப்பட்டாலும், தரமான பழங்களின் வரத்து குறைவாக இருப்பதால் விலை குறையாமல் நீடிக்கிறது.
ஒருபுறம் வரத்து அதிகரிப்பால் நுகர்வோர் மகிழ்ச்சியடைந்தாலும், மறுபுறம் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழலும் உருவாகியுள்ளது.. எனினும் பெரும்பாலான இடங்களில் தக்காளி விலை குறைந்துள்ளது, இல்லத்தரசிகளுக்கு ஹேப்பியான விஷயம்தான்...!!!












Click it and Unblock the Notifications