கேரளாவில் கனமழை பெய்கிறது.. பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைகிறது.. காரணம் இது தான்
Recommended Video
தேனி: கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணம், கேரள அரசு ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து இடுக்கி அணைக்கு திருப்பி விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக பெய்தது. அதிலும் சில நாட்கள் மட்டும் பெய்துவிட்டு அதன் பிறகு ஏமாற்றிச் சென்றது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் குறைவான மழைப் பொழிவே கிடைத்தது.
கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருவதால் 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. இருப்பினும், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து மிககுறைவாக உள்ளது.

நீர்மட்டம் சரிந்தது
ஜூலை 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் சராசரியாக 50 மிமீ மழை பெய்துள்ளது. ஆனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 900 கனஅடியை எட்டவில்லை. அணை நீர்மட்டம் 114 அடிக்கும் குறைவாகவே உயர்ந்துள்ளது.

நீர்வரத்து குறைந்தது
இடுக்கி அணை, பெரியாறு அணையை விட 8 மடங்கு பரப்பளவில் பெரியது. இவ்வளவு பெரிய அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 10 அடி உயர்ந்து நேற்று 2,314.8 அடியாக இருந்தது. பெரியாறு அணை நிறைந்தால் மட்டுமே உபரிநீர், வண்டிப்பெரியாறு ஆற்றின் வழியாக திறக்கப்படும்.

தடுப்பணைகள்
தற்போது பெரியாறு அணை நீர்மட்டம் 114 அடிக்கும் குறைவாக உள்ள நிலையில், வண்டிப்பெரியாறு ஆற்றில் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே கேரள அரசு, கட்கி அணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி பெரியாறு அணைக்கு வரும் நீரை தடுத்து இடுக்கி அணைக்கு திருப்பி விட்டுள்ளது.

மிகப்பெரிய கேள்விக்குறி
கேரளா சிறு, சிறு தடுப்பணைகள் மூலமும், ஓடைகள் வெட்டியும் பெரியாறு அணைக்கு வரும் நீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு சேர்த்து விட்டது. குறிப்பாக, பாம்பனாறு தண்ணீர் பட்டுமலை, பருந்தும்பாறை வழியாக பெரியாறு அணைக்கு வந்து கொண்டிருந்தது. கேரள அரசு இதனை தடுத்து, சுரங்கம் தோண்டி இந்த நீர் முழுவதையும் இடுக்கி அணைக்கு கொண்டு செல்கிறது. இதே நிலை நீடித்தால், கேரளாவில் எவ்வளவு மழை பெய்தாலும், இனிமேல் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து என்பது, கேள்விக் குறியாக மாறும் என்கின்றனர் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
உடனடியாக, தமிழக அரசு தலையிட்டு இந்த பிரச்னையை தீர்க்க, மத்திய அரசிடம் முறையிட்டு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் பெரியாறு அணையும் வறண்டு விடும் அபாயம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications