சபரிமலை பக்தர்களே முக்கிய அறிவிப்பு! போடி வழியாக கேரளா போறீங்களா? கனமழையால் சாலையில் உருண்ட பாறைகள்!
தேனி: தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததால் போடிமெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கேரளா செல்லும் வாகனங்கள் முந்தல் பகுதியிலும், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் போடிமெட்டு பகுதியிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று கடற்கரையை நெருங்கி உள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது .தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.
இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் 13-ஆம் தேதியான இன்று திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ,இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, கரூர், திருவாரூர், தர்மபுரி, நாகப்பட்டினம், நாமக்கல் திருப்பூரில் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதே போல், தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் தொடர் கனமழை பெய்தது. இந்த கனமழையால் ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததால் போடிமெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கேரளா செல்லும் வாகனங்கள் முந்தல் பகுதியிலும், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் போடிமெட்டு பகுதியிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. போடியில் இருந்து கேரளா செல்லும் போடிமெட்டு மலைச்சாலையில் புலியூத்து என்னும் பகுதிக்கு அருகே இன்று அதிகாலை ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது.
நல்வாய்ப்பாக அப்பகுதி வழியாக வந்த வாகனங்களின் மீது விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் ராட்சத பாறைகள் விழுந்து கிடப்பதால் கேரளாவில் இருந்து வந்த வாகனங்களும், போடியில் இருந்து கேரளா சென்ற வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து முந்தல் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போடியில் இருந்து கேரளா சென்ற வாகனங்கள் முந்தல் பகுதியிலும், கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வந்த வாகனங்கள் அனைத்தும் போடிமெட்டு பகுதியில் உள்ள கேரள எல்லை பகுதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராட்சதப் பாறைகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

அதுவரை போடிமெட்டு மலைச்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் ராட்சத பாறைகளை அகற்றி சாலைகளை சீரமைக்கும் வரை வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெட்டு மற்றும் குமுளி வழியாக மாற்றுப்பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைச்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து கிடப்பதன் விளைவாக தமிழ்நாடு கேரளா இடையே போடிமெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தவிர மலைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. இதனால் போடியில் இருந்து மூணாறு ராஜாக்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், ஏலத் தோட்டங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு கூலி வேலைக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications