தனிமை.. அமைதி... நீர் திரண்ட கண்கள்... மனதை விட்டு நீங்காத சோகம்... எப்படி இருக்கிறார் ஓ.பி.எஸ்...?
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தால் இன்னும் தனது மனைவியின் மரண துக்கத்தில் இருந்து முழுமையாக மீளமுடியவில்லை.
தன்னை சந்தித்து ஆறுதல் கூற வருபவர்களிடம் அமைதியை மட்டுமே வெளிப்படுத்தி வரும் அவர், அவ்வப்போது மனம் தாங்காமல் கண் கலங்கியும் விடுகிறாராம்.
மனைவியின் நினைவலைகளை சுமந்தபடி சோகமாக காட்சியளிக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது மகள் மற்றும் மகன்கள் தேற்ற முற்பட்டுள்ளனர்.

விஜயலட்சுமி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, சசிகலா, வைகோ, உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி ஓ.பி.எஸ். மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இறுதிக்காரியம்
அதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமியின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மனைவியின் உடல் முன்னே செல்ல அந்த வாகனத்தை பின் தொடர்ந்தபடியே ஓ.பி.எஸ்.சும் பெரியகுளத்துக்கு சென்றார். அங்கு ஊரே திரண்டு விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதையுடன் இறுதிகாரியமும் நடைபெற்றது.

மூத்த மகன்
மூத்த மகன் என்கிற முறையில் தனது அம்மாவுக்கான இறுதிச்சடங்குகளை ரவீந்திரநாத் எம்.பி.மேற்கொண்டார். மனைவியின் மரணம் காரணமாக சட்டசபை நிகழ்வுகளில் கூட கலந்துகொள்வதை தவிர்த்து சொந்த ஊரிலேயே ஓ.பி.எஸ். தங்கியுள்ளார். அவரை காண, ஆறுதல் கூற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை வந்து செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல் கடந்த கால அதிமுக ஆட்சியில் பலன்பெற்ற முக்கிய தொழிலதிபர்கள் சிலரும் சத்தமின்றி பெரியகுளத்துக்கு விசிட் அடித்து ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறிச்செல்கின்றனர்.

நீங்காத சோகம்
இந்நிலையில் ஓ.பி.எஸ். எப்படி இருக்கிறார் என்பது குறித்து தேனியை சேர்ந்த ரவீந்திரநாத் எம்.பி.யின் நண்பர் ஒருவரிடம் பேசினோம். அப்போது கூறிய அவர், ''அண்ணி மரணத்தை அண்ணனால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு தூரம் அண்ணனும் அண்ணியும் ஒருவருக்கு ஒருவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள். அண்ணியின் இறுதிக்காரியத்துக்கு பிறகு அண்ணன் ரொம்பவே மனம் உடைந்துவிட்டார். அமைதியையும், தனிமையையும் விரும்புகிறார். அவரை குடும்ப உறவுகளும், பெயரன், பெயர்த்திகளும் தேற்றி வருகிறார்கள்.''

கண்களில் கண்ணீர்
''சுவற்றில் மாட்டப்பட்டுள்ள அண்ணியின் படத்தை பார்த்தவாறு தனக்குள்ளே தனது சோகத்தை புதைத்துகொள்கிறார். தனக்கு நன்கு அறிமுகமான நபர்கள் மற்றும் ஆரம்பகால நண்பர்களிடம் பேசும் போது மட்டும் அண்ணணின் கண்களில் நீர் திரண்டு நிற்கிறது. விரைவில் இந்த சோகத்தில் இருந்து அவர் மீள்வார் என நம்பிக்கை உள்ளது'' என்றார். குடும்பத்தின் முதுகெலும்பாக திகழும் மனைவியின் மறைவை மறப்பது என்பது யாருக்கும் அவ்வளவு எளிதல்ல.












Click it and Unblock the Notifications