தேனியில் மோடி.. பக்கத்து ஊரில் காலி குடங்களுடன் பெண்கள் நடு ரோட்டில் போராட்டம்
தேனி: தேனியில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்துக்கு ஆதரவாக தேனியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால் பக்கத்து ஊரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பான போராட்டப் படத்தை தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#மோடியைகொட்டும்தேனி
— EVKS Elangovan (@EVKSElangovan) April 13, 2019
ஆண்டிப்பட்டியில் மோடியின் பொது கூட்ட மேடைக்கு அருகில் பொது மக்கள் காலி குடங்கள் உடன் சாலை மறியல் போக்குவரத்து 1மணி நேரம் நிறுத்தம் pic.twitter.com/O4alFmB5Gu
போராட்டம் குறித்து விசாரித்தபோது தெரிய வந்ததாவது: தேனி அருகே உள்ளது சண்முக சுந்தராபுரம். இங்கு நீண்ட காலமாக குடிநீர்ப் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்காக பலமுறை இவர்கள் போராடியுள்ளனர். போராட்டத்தின் விளைவாக இவர்களது ஊரை வைகை அணை ஆண்டிப்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் சேர்த்தது அதிமுக அரசு.
தற்போது இந்த குடிநீர்த் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இந்த கிராமத்திற்குத்தான் குடிநீர் வரவில்லை. மக்கள் தொடர்ந்து தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் பிரதமர் வருகையைத் தொடர்ந்து கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் காலிக் குடங்களுடன் நடு ரோட்டுக்கு வந்து போராட்டத்தில் குதித்தனர்.
மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் போராட்டத்தில் குதித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரதமர் வருகையின்போது போராட்டம் நடந்ததால் போலீஸார் வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்ற முனையவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பிரச்சினையாகி விடும் என்பதால் போலீஸார் அமைதி காத்தனர். போராட்டம் குறித்து டிவீட் போட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், மோடியைக் கொட்டும் தேனி என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications