Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய்ராம் ரமேஷ் மிரட்டியதால் உடனே போராட்டத்தை கைவிட்டவர் கருணாநிதி.. திமுக துரோகம்: அண்ணாமலை பேச்சு!

Subscribe to Oneindia Tamil

தேனி: கேரள அரசுக்கு எதிராக கருணாநிதி போராட்டம் அறிவித்தார். போராட்டம் நடத்தினால் 2G வழக்கு சம்மந்தமாக சிபிஐ ரெய்டு வரும் என்று ஜெயராம் ரமேஷ் கருணாநிதியை எச்சரித்ததால் உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்றவர் கருணாநிதி. தமிழக மக்களுக்கு எதிரான திமுகவின் துரோக வரலாறுகளில் இதுவும் ஒன்று என அண்ணாமலை தேனியில் பேசியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி பாதயாத்திரையை தொடங்கினார். இந்த நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். நடைபயணத்தின் இரண்டாம் பகுதி தற்போது நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் போடியில் நடைபயணம் செய்த அண்ணாமலை, அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

Karunanidhi withdraw protest after Jairam rameshs threat: says Annamalai

அண்ணாமலை பேசுகையில், "19ஆம் நூற்றாண்டில் தென்காசியம்பதி என்று அழைக்கப்பட்ட ஊரான போடிநாயக்கனூர் நகரில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட மக்கள் திரள் நடுவே ஆரவாரமாக நடந்தது. நகரத்தில் ஊடுருவி பண்ணைகளை அழித்த காட்டுப்பன்றியை வீழ்த்திய போடயநாயக்கர் என்பவர் வீரத்தைப் போற்றி, திருவிதாங்கூர் மன்னரால் போடிநாயக்கனூர் என பெயரிடப்பட்டது.

நறுமணப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படும் ஏலக்காய், ஆண்டுக்கு 40,000 டன் இங்கு விளைவிக்கப்பட்டு, நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால் தான் போடிநாயக்கனூர் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, போடிநாயக்கனூரை குட்டி காஷ்மீர் என்று அழைத்தார். 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதா அவர்களை வெற்றி பெறச் செய்து எதிர்க்கட்சி தலைவராக ஆக்கிய ஊர் போடி.

12 ஆண்டுகளுக்கு முன்பு, 2010ஆம் ஆண்டு, தேனி - போடி ரயில் பாதையை அகலப்படுத்துவதற்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. காங்கிரஸ் காலத்தில் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றன. ஆனால் பாரதப் பிரதமர் மோடி வந்த பின்பு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது போடிக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. போடி மக்களின் ஆண்டு 50 கனவை நிறைவேற்றியவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி, சென்னை போடி ரயில் சேவை தொடங்கப்பட்டது. போடி மக்களின் பல ஆண்டு கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.

Karunanidhi withdraw protest after Jairam rameshs threat: says Annamalai

போடி - தேனி - உசிலம்பட்டி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ. 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போடி அருகில், சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, 1,000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்ட நமது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 10500 கோடி ரூபாய் மதிப்பிலான ரேஷன் அரிசியை நியாய விலை கடைகளுக்கு வழங்கியுள்ளது நமது மத்திய அரசு.

பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற ஜெயக்குமார், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பாண்டியம்மாள், பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு பெற்ற நாகராஜ், தேசிய விவசாயி வளர்ச்சி திட்டத்தின் கீழ், சூரிய சக்தி உலர் இயந்திரம் பெற்ற காளியப்பன், விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் 54 லட்ச ரூபாய் மானியம் மூலம் பயன்பெற்ற ராமதாசு. இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

தமிழக மக்களின் பல நாள் கோரிக்கையான முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டது. அணையை வலுப்படுத்தும் பணிகளை முடித்த பிறகு, முழுக் கொள்ளளவான 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளித்தது. 2006 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று, கேரள கம்யூனிஸ்ட் அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி, கேரளாவில் உள்ள இருபத்தி இரண்டு அணைகளின் முழு நீர்த்தேக்க மட்டத்திற்கு உச்சவரம்பை நிர்ணயித்தது.

முல்லைப் பெரியாறு அணை அணையின் கொள்ளளவு உச்சவரம்பு, கேரள கம்யூனிஸ்ட் அரசின் மசோதாவால் 136 அடியாக நிர்ணயிக்கப்பட்டது. 142 அடியை 136 அடியாக கேரள அரசு குறைத்தது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுக்குழு கூறியும், கேரளா அரசு ஒப்புக்கொள்ளவில்லை. 142 அடியாக உயர்த்தினால் அணை உடைந்துவிடும் என்று கேரளா காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்தது.

அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த, ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி விளையாட்டு என்று தடை செய்த காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், செப்டம்பர் 2009 இல் பெரியாறு புலிகள் சரணாலயத்திற்குள் புதிய அணை கட்டுவதற்கு ஏற்ற இடத்தைக் கண்டறியவும், ஆய்வு செய்யவும் கேரள அரசுக்கு அனுமதி வழங்கினார். அதுவரை தூக்கத்தில் இருந்த கருணாநிதி திடீரென விழித்து கொண்டு கேரளா அரசுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்தார்.

போராட்டம் நடத்தினால் 2G வழக்கு சம்பந்தமாக சிபிஐ ரெய்டு வரும் என்று ஜெய்ராம் ரமேஷ் கருணாநிதியை எச்சரித்தார். உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்றவர் கருணாநிதி. தமிழக மக்களுக்கு எதிரான கருணாநிதி மற்றும் திமுகவின் துரோக வரலாறுகளில் இதுவும் ஒன்று. திமுக ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகுதான், 2012ஆம் ஆண்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது. இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 30 மாதங்களாக பேபி அணையை சரி செய்கிறோம் என்று ஊரை ஏமாற்றி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழியே.

தேனியில் திராட்சைப் பழங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை, முருங்கைக்காய் பூங்கா, குமுளியில் இருந்து கண்ணகி கோயிலுக்குத் தார்ச் சாலை, கூ.சுப்புலாபுரம், ஆண்டிப்பட்டியில் உயர் தொழிட்நுட்ப ஜவுளிப் பூங்கா, தேனி, பெரியகுளம், போடிநாயக்கனூரில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேனி மாவட்ட மக்களுக்கு திமுக வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த துரோக திமுக கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+