இருட்டிலிருந்து வெளிவந்த 2 உருவம்..நசுங்கிய தலை..அடங்கிய மூச்சு! இனி வெளியே தனியா கூட போக முடியாதா?
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். உடன் நடந்து சென்ற மற்றொருவருக்கு கடும் அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் தேனி எஸ்பி சிவப்பிரசாத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகன். 52 வயதான இவர் கன்னியப்பபிள்ளைபட்டி சாலையில் அமைந்திருக்கும் நந்தகோபால்சாமி திருக்கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முருகனை அடித்து கீழே தள்ளி அவர் தலையில் கல்லை தூக்கிப்போட்டு படுகொலை செய்தது தெரியவந்தது.

மேலும் அவர் சடலமாக கிடந்த இடத்திற்கு அருகே ரத்த அடையாளங்களுடன் கருங்கல், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கடந்தது. மேலும் ஒரு இருசக்கர வாகனம் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்த போது, அந்த இருசக்கர வாகனத்திற்கு சொந்தமான நபர் தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரித்ததில் நேற்று இரவு தன்னை இரண்டு பேர் அரிவாளால் தாக்கி தன்னிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றதாக தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் நேரில் ஆய்வு செய்தார். மேலும் தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தவுடன், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், மற்றொருவரை அரிவாளால் வெட்டிவிட்டு அவருடைய செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதாக கூறப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனியில் கடந்த சில தினங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் இது போல் சாலையில் தனியாக செல்பவர்களை குறி வைத்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி வருகிறதா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் உண்மையிலேயே இது வழிப்பறிக் கொள்ளையர்களின் கைவரிசை தானா அல்லது போதை ஆசாமிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வரும் நிலையில் வாகனங்களில் இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார். அதே நேரத்தில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications