மதுரை டூ தேனி.. தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து.. வெளியில் குதித்த டிரைவர்.. நடந்த பயங்கரம்
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 30 பயணிகளுடன் மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது வெளியே குதித்த ஓட்டுநர் தங்கபாண்டியன் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
தேனி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பொதுவாகவே மின்னல் வேகத்தில் செல்லும். 75 கிமீ தூரம் உள்ள தேனி மதுரையை அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் சர்வ சாதாரணமாக 1.30 மணி நேரத்தில் சென்றுவிடும். இதனால் அவ்வப்போது பேருந்துகள் 90 கிமீ வேகத்தில் கூட செல்கின்றன.

தேனியில் வண்டியை எடுத்தால், அடுத்து ஆண்டிபட்டியிலும், அதற்கு அடுத்தபடியாக உசிலம்பட்டியிலும், கடைசியில் செக்கணூரணியில் தான் நிற்கும். வேறு எங்குமே பெரும்பாலும் வாகனங்கள் நிற்காது.
மதுரையில் இருந்து தேனி செல்லும் வழியிலும் இதேபோல் தான்வாகனங்கள் நிற்கும். உசிலம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி இடையே தான் வாகனங்கள் மிக அதிக வேகத்தில் செல்வது அடிக்கடி நடக்கும். இதன் காரணாக ஆண்டிபட்டி அருகே அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. அப்படித்தான் இன்றும் விபத்து நடந்துள்ளது.
மதுரையில் இருந்து தேனி நோக்கி 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது திடீரென வெளியே குதித்த அரசு பேருந்து ஓட்டுநர் தங்கபாண்டியன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம் அரசு பஸ், சாலையோரம் இருந்த முள்வேலி மீது மோதி சிறிய சேதாரத்துடன் நின்றது; பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications