'தேவர் சிலை' முன்பு 'தேவர் மகனுக்கு' வரவேற்பு.. கமல் வருகையால் கலகலத்த உசிலம்பட்டி!
தேனி: உசிலம்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தை நிறுவனர் கமலஹாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி பிரிவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரும்,தலைவருமான நடிகர் கமலஹாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் கமலஹாசனுக்கு உசிலம்பட்டி 'தேவர் சிலை' முன்பு கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதனால் அங்கு ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். ஆனால் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போலீசார் அனுமதி வழங்காததால் எதுவும் பேசவில்லை. கைகும்பிட்டப்படி சென்றார்.

பின்னர் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் கிராம மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் அனுமதி இல்லாததால் அங்கும் பேசாமல் கையசைத்தபடி சென்றார்.
தொட்டப்பநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கொடி ஏற்ற அவரது கட்சியினரால் கொடி கம்பம் நடப்பட்டிருந்தது.ஆனால் அனுமதியில்லாமல் நட்டதாகக் கூறி கட்சிக்கொடி கம்பத்தை போலீசார் அகற்றினர்.

'தேவர் மகன்' திரைப்படத்தில் நடித்த பிறகு கமல்ஹாசனுக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு உயர்ந்ததாக திரையுலகில் கூறுவார்கள். தேனி மாவட்டம்.. அதிலும், உசிலம்பட்டி பகுதியும், முக்குலத்தோர் அதிகமாக உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications