மூக்கறுப்பட்ட கேரளா.. இரும்பு போல் உறுதியாக முல்லை பெரியாறு அணை! அதிகாரிகள் ஆய்வில் வெளியான உண்மை!
தேனி: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதை உறுதி செய்த துணை கண்காணிப்பு குழு, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயினுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர். இதனால், அணை பலமாக இல்லை என கேரள அரசு இதுநாள் வரை சொல்லி வந்த பொய்கள் அம்பலமாகியுள்ளதாக தேனி மாவட்ட விவசாயிகள் கூறியுள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு இதுவரை மத்திய நீர்வள ஆணையத்திடம் இருந்த நிலையில், தற்போது தேசிய அணைகள் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட மூவர் குழு மற்றும் ஐவர் குழு கலைக்கப்பட்டது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலமாக புதிய குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் நியமித்தது. இக்குழுவில் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன், கேரள பிரதிநிதிகளாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டிங்கு பிஸ்வால், நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளர் பிரியேஷ் மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு அதிகாரி ஆனந்த் இராமசாமி, டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழு அதிகாரி விவேக் திரிபாதி என 7 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு கடந்த 15 தினங்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 130 அடிக்கும் மேலாக உள்ளது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை புதிய கண்காணிப்பு துணைக் குழுவினர், முதல் முறையாக அதன் இயக்குனர் கிரிதர் தலைமையில், தமிழக அரசின் சார்பில் தலைமை பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை செயற்பொறியாளர் செல்வம், மற்றும் கேரள அரசு தரப்பில் தலைமை பொறியாளர் லியன்ஸ் பாபு, உதவி பொறியாளர் ஜிசித் ஆகியோர் அடங்கிய துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மெயின் அணை, பேபி அணை, மதகுகளின் இயக்கம், கேலரி, கசிவுநீர் உள்ளிட்ட அனைத்தையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் அணையின் நீர்மட்டம் 130.45 அடிக்கு ஏற்ப கசிவு நீர் நிமிடத்திற்கு 52.12 லிட்டர் என கணக்கீடு செய்தனர். மேலும் அணையில் உள்ள 13 மதகுகளில் 3, 6, 9 ஆகிய 3 மதகுகளை இயக்கி சரி பார்த்தனர். மதகுகளின் இயக்கம் சீராக இருந்தது. இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதை துணை கண்காணிப்பு குழுவினர் உறுதிப்படுத்தினர்.
பின்னர் தேக்கடியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அணில் ஜெயினுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் போது முதன்மை கண்காணிப்பு குழுவில் ஆலோசனைகளை பெறவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications