பவதாரிணி உடல் நல்லடக்கம்.. கண்ணீருடன் இளையராஜா.. கையைப் பிடித்து ஆறுதல் தெரிவித்த ஓபிஎஸ்!
தேனி: இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நல்லடக்கம் தேனி லோயர் கேம்ப் பகுதியில் நடைபெற்ற நிலையில், முன்னதாக பவதாரிணி உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் இறுதி அஞ்சலி செலுத்தி, இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47). பின்னணி பாடகியான பவதாரிணி, ராசய்யா, அலெக்சாண்டர், அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களில் பாடல் பாடியுள்ளார். 2000-ம் ஆண்டில் வெளியான 'பாரதி' என்ற திரைப்படத்தில் 'மயில் போல பொண்ணு ஒண்ணு' என்ற பாடல் பாடியதற்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். பவதாரிணியின் உடல் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்பு இவரது உடல் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இன்று காலை அங்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த வளாகத்தில்தான் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள், மனைவி ஜீவா ஆகியோரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மணி மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இளையராஜா மகள் பவதாரிணி உடல், அவரது தாயார் மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணி உடலுக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார் ஓபிஎஸ்.
தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், முருக்கோடை ராமர், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான் உள்ளிட்ட பலரும் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications