இதுவரை தோல்வியே சந்திக்காத ஓபிஎஸ்.. இந்த முறை காத்திருக்கும் பெரும் சவால்
தேனி: இதுவரை தேர்தல்களில் தோல்வியே சந்திக்காதவர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். ஆனால் இந்த முறை அவருக்கு போடிதொகுதியில் பெரும் சவால் காத்திருக்கிறது.
1996 ஆம் ஆண்டு பெரியகுளம் நகராட்சித் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.
Recommended Video

அதன்பிறகு 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். அதில் வெற்றி பெற்ற அவருக்கு முதல்வர் பதவியே கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான். 2002ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஓபிஎஸ் பரதனைப் போல் ஆட்சியை ஒப்படைத்தார்.
2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பெரியகுளம் தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் 2011ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதி. அதாவது அவருடைய சொந்த தொகுதி தனி தொகுதியாக மாறியது. இதனால் பெரியகுளத்திற்கு அடுத்து உள்ள பக்கத்து தொகுதியான போடி தொகுதியில் 2011 ஆம் ஆண்டு களம் கண்டார்.

இரண்டு முறை வெற்றி
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் லட்சுமணனை விட சுமார் 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ஓ பன்னீர்செல்வம் போடி தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் லட்சுமணனைவிட 15 ஆயிரம் வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதுவரை நடந்த எந்த தேர்தலிலும் ஓ பன்னீர்செல்வம் தோல்வியை சந்தித்தது இல்லை.

நெருக்கடி
2001 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரையிலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக இருந்தது. இப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஆகவே ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். தனது தொகுதிக்கு பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்பட பல்வேறு வசதிகளை கொண்டு வந்திருந்தாலும், வன்னியர்களுக்கு அளித்த இட ஒதுக்கீடு விவகாரம் இங்கு அவருக்கு கொஞ்சம் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்பதுதான் உண்மை.

எதிர்க்கட்சிகள்
கடந்த ஒரு வாரமாக சில இயக்கத்தினர் இட ஒதுக்கீடு பிரச்சினையை எழுப்பி கடும் பிரச்சாரங்களை ஓபிஎஸ் எதிராக மேற்கொண்டு வருகிறார்கள். மறுபக்கம் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இதை முறியடித்து வெற்றி பெற ஓபிஎஸ் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.

சுதாரிப்பாரா ஓபிஎஸ்
ஏனெனில் திமுக கூட்டணி இந்த முறை வலுவாக களம் காண்கிறது. இப்படி சொல்ல காரணம், ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் மற்றும் ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆண்டிபட்டி ஆகிய இரண்டு தொகுதிகளையும் இடைத்தேர்தலின் போது திமுக வெற்றி பெற்று விட்டது. எனவே இதை கவனத்தில் கொண்டு சுதாரித்து செயல்பட்டால் மட்டுமே போடியில் வெற்றி சாத்தியம்.












Click it and Unblock the Notifications