கல்வெட்டுல எம்பின்னு போட்டதற்கு காரணம் இவர் தானாமே? கைது செய்தது போலீஸ்!
Recommended Video
தேனி: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கல்வெட்டு சர்ச்சை தொடர்பாக முன்னாள் காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் குச்சனூர் அன்னப்பூரணி ஆலயத்தின் கட்டுமான பணிக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் நன்கொடை அளித்தனர். இதையடுத்து கடந்த 16ஆம் தேதியிட்டு கோவில் வளாகத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டது.
அதில் நன்கொடை அளித்தவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. அந்த கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயருக்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

கொந்தளிப்பு
இந்த கல்வெட்டு விவகாரம் நேற்று பெரும் சர்ச்சையானது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் ஓபிஎஸ் மகனின் பெயருக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என போடப்பட்டது எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நடவடிக்கை
இதையடுத்து உடனடியாக அந்த கல்வெட்டில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் பெயர் மறைக்கப்பட்டது. கல்வெட்டு மீது மற்றொரு கல்வெட்டு வைக்கப்பட்டு சர்ச்சைக்குரிய கல்வெட்டு மறைக்கப்பட்டது.

தவறு
இந்நிலையில் இதுகுறித்து இன்று விளக்கமளித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தேர்தல் முடிவுகள் வெளி வராத நிலையில் கல்வெட்டில் எம்பி என்று பொறிக்கப்பட்டது தவறான செயல் என்றார். மேலும் கல்வெட்டில் எம்பி என குறிப்பிட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கைது
இதைத்தொடர்ந்து ரவீந்திரநாத் சின்னமனூர் காவல்நிலையத்தில் கல்வெட்டு விவகாரம் தொடர்பாக இன்று புகார் அளித்தார். ரவீந்திரநாத் புகாரின் அடிப்படையில் போலீசார், கோவில் நிர்வாகியும் முன்னாள் காவலருமான வேல்முருகனை கைது செய்தனர்.

முன்னாள் காவலர்
வேல்முருகன் மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள வேல்முருகன் சின்னமனூரை அடுத்த ஓடைப்பட்டியை சேர்ந்த முன்னாள் காவலர் ஆவார்.












Click it and Unblock the Notifications