பெரியகுளத்தில் தனி அலுவலகம் திறந்த ஓ.பி.எஸ். தம்பி... குவியும் பார்வையாளர்கள்
தேனி: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ஓ.ராஜாவை சந்திக்க பார்வையாளர்கள் அதிகளவில் படையெடுப்பதால் பெரியகுளத்தில் தனியாக புதிய அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார்.
தினமும் இரண்டு வேளை அலுவலகத்திற்கு வரும் அவரை சந்திப்பதற்காக பால் கூட்டுறவு சொசைட்டிகளை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிகிறார்கள்.
ஆவின் கோரிக்கைகள் தொடர்பான பணிகள், கட்சிப்பணிகள், உள்ளிட்ட விவகாரங்களை பெரியகுளம் அலுவலகத்தில் வைத்து தான் அவர் கவனித்துக்கொள்கிறாராம்.

ஓ.பி.எஸ். தம்பி
சுமார் அரைநூற்றாண்டு காலமாக செயல்பட்டு வரும் மதுரை ஆவினில் இருந்து தேனி ஆவின் அண்மையில் பிரிக்கப்பட்டது. பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு அதன் தலைவராக இப்போது இருப்பவர் ஓ.ராஜா. இவர் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த தம்பி. முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2016)-ல் நாகமுத்து என்ற பூசாரி தற்கொலை வழக்கில் இவர் பெயர் அடிபட்டது.

விடாப்பிடியாக
பெரியகுளம் நகரமன்றத் தலைவராகவும் இவர் இருந்திருக்கிறார். இதனிடையே இவர் தேனி ஆவின் தலைவரானதை ஓ.பி.எஸ். பெரியளவில் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் ஒரே குடும்பத்தில் இருந்து தம்பி, மகன் மற்றும் தாம் உட்பட மூன்று அதிகார மையங்கள் உருவாகினால் அது விமர்சனத்திற்கு உள்ளாக கூடும் என அஞ்சினார் ஓ.பி.எஸ். ஆனால், அதை எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை ஓ.ராஜா. ஆவின் தலைவராகியே தீருவது என விடாப்பிடியாக நின்று சாதித்தார்.

தனி அலுவலகம்
தேனி மாவட்ட ஆவினின் முதல் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஓ.ராஜாவுக்கு அதிகாரப்பூர்வமான அலுவலகம் தேனியில் இருந்தாலும், பெரியகுளத்தில் சொந்தமாக புதிய அலுவலகம் ஒன்றை அமைத்துக்கொண்டார். காரணம், தன்னை பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் வருவதால் இந்த தனி அலுவலகமாம்.

நடவடிக்கைகள்
நாள் தோறும் காலை மாலை என இரண்டு வேளைகள் தன்னை சந்திக்க வருபவர்களை பார்க்கும் ஓ.ராஜாவிடம் ஏகப்பட்ட கோரிக்கைகள் குவிகிறதாம். ஊற்றிய பாலுக்கு பணம் தரவில்லை, கறவை மாடுகளுக்கு வங்கி லோன் தர மறுக்கிறது, ஆவின் முகவர் வாய்ப்பு, உள்ளிட்ட இன்னும் பல விவகாரங்களுக்காக அவரை சந்தித்து முறையிடுகிறார்களாம். அதனை பொறுமையாக கேட்டுக்கொள்ளும் ஓ.ராஜா, உடனடியாக அது குறித்து நடவடிக்கையும் எடுக்கிறாராம்.












Click it and Unblock the Notifications