இதெல்லாம் பேர கெடுக்க சதிங்க.. கல்வெட்டு விவகாரம் குறித்து ஓபிஎஸ் மகன் விளக்கம்!
தேனி: தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக கல்வெட்டு விவகாரம் குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் விளக்கம் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் குச்சனூரில் காசி அன்னபூரணி ஆலயம் கட்டப்பட்டு வந்தது. ஆலயம் கட்டி முடித்து கும்பாபிஷேக பணிகள் நடந்த நிலையில் கோவிலுக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு கல்வெட்டு வைக்கப்பட்டது.
அந்த கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

கண்டனம்
இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

பெயர் மறைப்பு
இதையடுத்து கல்வெட்டில் இருந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பெயர் மறைக்கப்பட்டது. கல்வெட்டின் மீது மற்றொரு கல்வெட்டு வைத்து ரவீந்திரநாத் பெயர் மறைக்கப்பட்டது.

தவறான செயல்
இந்நிலையில் கல்வெட்டு விவகாரம் குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தேர்தல் முடிவுகள் வெளி வராத நிலையில் கல்வெட்டில் எம்பி என்று பொறிக்கப்பட்டது தவறான செயல்.

களங்கம் ஏற்படுத்த முயற்சி
குச்சனூர் அன்னப்பூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் கண்டிக்கத்தக்கது. கல்வெட்டில் எம்பி என குறிப்பிட்டது என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி. கல்வெட்டு விவகாரம் நேற்றுதான் எனது கவனத்திற்கு வந்தது. கல்வெட்டில் எம்பி என குறிப்பிட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications