ஓ.பி.எஸ்.க்கு வெற்றிலை மாலை சூடிய ஆர்.பி.உதயகுமார்! பெரியகுளத்தில் குவிந்த தென்மாவட்ட நிர்வாகிகள்!
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெறுவதற்காக தென் மாவட்ட நிர்வாகிகள் பலரும் பெரியகுளம் விஜயம் செய்துள்ளனர்.
மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் ஓ.பி.எஸ்.சை சந்தித்து ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து பெற்றிருக்கின்றனர்.
இதனிடையே புத்தாண்டை ஒட்டி ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவருக்கு வெற்றிலை மாலை சூடியிருக்கிறார்.
அதிர்ச்சி!மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா.. என்ன சொல்கிறார் துணை முதல்வர்
ஆங்கில புத்தாண்டு
ஆங்கில புத்தாண்டு தினமான இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்திலும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெறுவதற்காக கட்சியினர் ஆர்வம் காட்டுவதை அறியமுடிகிறது. அந்த வகையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.இல்லத்துக்கு படையெடுத்த தென்மாவட்ட நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக் கூறி வாழ்த்தும் பெற்றனர்.
வெற்றிலை மாலை
ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஒரு பெரிய படையையே திரட்டி வந்திருந்தார். இதேபோல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் மதுரை மாவட்ட அதிமுக இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு ஓ.பி.எஸ்.சை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார். மேலும், ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெற்றிலை மாலையை ஓ.பி.எஸ்.க்கு ஆர்.பி. உதயகுமார் சூடியுள்ளார். வெற்றியை தரும் வெற்றிலை மாலை என்ற முதுமொழி ஒன்று உண்டு.
மனம் விட்டு பேச்சு
அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் எந்த வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த வெற்றிலை மாலையை முன்னாள் அமைச்சர் உதயகுமார் சூடினாரோ என அங்கிருந்த நிர்வாகிகளே பேசிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே தன்னை சந்திக்க வந்த நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். சிறிது நேரம் மனம் விட்டு பேசியதாகவும் திமுக அரசின் செயல்பாடுகள் பற்றி அந்த பேச்சு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொங்கு மண்டலம்
இதேபோல் கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் பலரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றிருக்கின்றனர். ஆட்சி மாறிய பிறகும் ஆதரவாளர்களும், கட்சியினரும் தங்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற வந்ததால் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.