தேனி டூ விசாகப்பட்டினம்.. கஞ்சா வியாபாரிகளை மலையிலேயே தூக்கிய போலீஸ்.. அதிர வைக்கும் தகவல்
தேனி: தமிழ்நாட்டில் கஞ்சா என்றால் கண்ணை மூடிக்கொண்டு தேனியை அடையாளம் காட்டுவார்கள். தேனி மாவட்டம் சுற்றுலா செல்வோருக்கும் இயற்கை விரும்பிகளுக்கும் மிகவும் பிடித்த ஊர். ஆனால் இந்த ஊருக்கு அழியாத கறையாக கஞ்சா இருக்கிறது. இங்கு கஞ்சா விற்பனைக்கு காரணமாக இருந்த ஆந்திர வியாபாரிகள் இரண்டு பேர் சிக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இயற்கை விரும்பிகளுக்கு மிகவும் பிடித்த மாவட்டங்களில் ஒன்று என்றால் அது தேனி தான்.. எண்ணவே முடியாத அளவிற்கு அருவிகளும், ஆறுகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளும், பசுமையான வயல்வெளிகளும் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துவிடும். முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட மாவட்டம் என்பதால் ஒரு காலத்தில் கேரளாவிற்கு கள்ளச்சாராயமும் கடத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகு கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டிருக்கிறது.

விக்ரம் படித்த பிதாமகன் படத்தில் காட்டப்பட்டது போல், ஒரு காலத்தில் கஞ்சா பயிரிடுதலும், விற்பனையும் அதிகமாக தேனியில் இருந்தது. ஆனால் போலீசார் அதிரடி நடவடிக்கையால் கஞ்சா பயிரிடுவது அடியோடு நின்றுவிட்டது. கஞ்சா விற்பனையும் முன்பு போல் இல்லை. எனினும் கஞ்சா வியாபாரிகள் இங்கு அதிக அளவில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதேநேரம் கஞ்சா புழக்கம் தேனி பக்கம் அதிகமாகவே இருப்பது போலீசார் எடுத்த அதிரடி கைது நடவடிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் அனைவரும் சிறிய அளவில் கஞ்சா விற்பனை செய்பவர்களாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கவும், கஞ்சா தேனி மாவட்டத்திற்கு நுழைவதையும் அடியோடு தடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டார். அதன் பேரில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளுக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிக்கொடுத்த வியாபாரிகள் சிலரும் கைது செய்யப்பட்டார்கள்.
கடந்த ஜூன் மாதம் ஆந்திராவில் இருந்து கடமலைக்குண்டுவுக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமணன்தொழுவை சேர்ந்த சத்யராஜ், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியை சேர்ந்த மாயன், கீரிப்பட்டியை சேர்ந்த வனராஜா ஆகிய 3 பேரை கைது செய்தார்கள்.
அதேபோல், கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து கம்பத்துக்கு கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கம்பம் வடக்கு போலீசார், இது தொடர்பாக கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த சிவராஜா, ஜங்கால்பட்டியை சேர்ந்த அபினேஷ், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டியை சேர்ந்த குணசேரகன், ராஜபாளையத்தை சேர்ந்த ராம்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்குகளின் பின்னணி குறித்து விசாரித்த போலீசார், கடமலைக்குண்டுவில் சிக்கிய நபர்களுக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவில் உள்ள சிந்தப்பள்ளி மலைக்கிராமத்தை சேர்ந்த பீட்டாரமணா (வயது 32) என்பவர் கஞ்சா விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர் அதேபோன்று கம்பத்தில் சிக்கிய கும்பலுக்கு விசாகப்பட்டினம் அருகே பாடேரு மலைப்பகுதியில் வசிக்கும் மஞ்சுநாத்குமார் (31) என்பவர் கஞ்சா விற்றதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடிக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். இதன்பேரில், கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் தேனியில் இருந்து கடந்த 3-ந்தேதி விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றனர். அங்கு கடந்த 6-ந்தேதி மஞ்சுநாத்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து பீட்டாரமணாவை அவர் வசித்து வந்த மலைப்பகுதிக்கே கடந்த ஆகஸ்ட் 7-ந்தேதி தனிப்படையினர் அதிரடியாக சென்று கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி மதுரைக்கு நேற்று அழைத்து வந்தனர். மதுரையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கைதான மஞ்சுநாத்குமார், பீட்டாரமணா ஆகிய 2 பேரும் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட தென்மாவட்டங்களை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளுக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. ஆந்திராவுக்கு சென்று முக்கிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் வெகுவாக பாராட்டினார்.












Click it and Unblock the Notifications