தேனி அருகே பள்ளி வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்ட மாணவன்.. என்ன நடந்தது
தேனி: தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி முடிந்த பின் வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
சம்பவம் நடந்தது என்ன?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், கடேசிக்கடவு எஸ்டேட்டைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் ராம் (9), தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். ராம், அதே பகுதியிலுள்ள அரசு கள்ளர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகிறான்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி நேரம் முடிந்து அனைவரும் வெளியேறிய நிலையில், மாணவன் ராம் மட்டும் வகுப்பறைக்குள் பூட்டப்பட்டான். மாலை வெகுநேரம் ஆகியும் சிறுவன் ராம் விடுதிக்கு வராததால், விடுதி ஆசிரியர்கள் பதற்றமடைந்து பல இடங்களில் தேடினர்.
சுமார் இரண்டு மணி நேரத் தேடலுக்குப் பிறகு, பள்ளிக் கட்டிடத்தின் ஒரு வகுப்பறையில் இருந்து வெளிச்சம் தெரிந்துள்ளது. அத்துடன், சிறுவனின் அலறல் சத்தமும் கேட்டுள்ளது. இதனைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், பள்ளிக்குள் சென்று வகுப்பறையின் கதவைத் திறந்தபோது, பயத்துடன் உள்ளே ராம் இருந்தது தெரியவந்தது. உடனடியாகச் சிறுவனை மீட்டு விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுவன் மீட்கப்பட்ட இந்த நிகழ்வு அப்பகுதியில் இருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
பள்ளி மற்றும் விடுதி தரப்பின் விளக்கம்:
இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளி மற்றும் விடுதி நிர்வாகத்தினர் அளித்த விளக்கத்தில், "ராம் மற்றும் அவனது இரண்டு சகோதரர்களும் இந்தப் பள்ளியில்தான் படிக்கின்றனர். ராம் தனது பெற்றோருடன் இருக்க விரும்பி அடிக்கடி விடுதியை விட்டுச் செல்வதும், முரண்டு பிடிப்பதுமாக இருந்துள்ளான். சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை, மற்ற மாணவர்கள் அனைவரும் வெளியேறியபோது ராம் வகுப்பறைக்குள் தூங்கிக் கொண்டிருக்கலாம்.
அதனால், அவன் உள்ளே இருப்பது தெரியாமல், ஆசிரியர்கள் வகுப்பறையைப் பூட்டிச் சென்றுவிட்டனர்" என்று தெரிவித்தனர். மேலும், மாணவன் தற்போது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ராமின் சகோதரர்கள் தொடர்ந்து விடுதியில் தங்கிப் படித்து வருவதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் இதுவரை எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மாணவன் வகுப்பறையில் பூட்டி வைக்கப்பட்ட சம்பவம், விடுதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications