ஓபிஎஸ் பண்ணை வீட்டிற்கு வந்த கொள்ளையர்கள்.. பணம், நகை இல்லாததால் கோபத்தில் செய்த செயல்!
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ்ஸுக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் ஒரு பண்ணை வீடு அமைந்துள்ளது.
பெரும்பாலும் ஓபிஎஸ் இந்த பண்ணை வீட்டில்தான் பார்வையாளர்களையும் முக்கிய நிர்வாகிகளையும் சந்திப்பது வழக்கம். இந்த வீட்டில் வைத்துதான் ஓபிஎஸ் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அருகே உட்காரணுமா? எடப்பாடிக்கு சிக்கல்! இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. முக்கிய முடிவு?
பண்ணை வீடு
இந்த பண்ணை வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் ஒரு அறை உள்ளது. இந்த அறையில் ஏசி, டிவி, பிரிட்ஜ் என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த அறையில் பால்கனி வழியாக வந்தால் பண்ணை வீட்டிற்குள்ளே வந்துவிட முடியும். இந்த நிலையில் நேற்று முன் தினம இரவு அந்த பண்ணை வீட்டின் பின்புறம் உள்ள சுவரின் வழியாக கொள்ளையர்கள் ஏறிக் குதித்தனர்.
பன்னீர்செல்வம்
பின்னர் பன்னீர் செல்வம் ஓய்வெடுக்கும் அறைக்குள் நுழைந்த அவர்கள் அங்கு ஏதேனும் பணம், நகை இருக்கிறதா என சல்லடை போட்டு தேடியுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். அப்படியே கீழே இறங்கி மற்ற பகுதிகளுக்கும் மர்மநபர்கள் சென்றுள்ளனர். அங்கும் அவர்கள் தேடி வந்தது கிடைக்கவில்லை.
சமையல் அறை
சமையல் அறைக்கு சென்று அங்காவது ஏதாவது தேருமா என பார்த்துள்ளனர். அங்கு உணவு கூட இல்லாததை பார்த்து மர்மநபர்களுக்கு கோபம் வந்துவிட்டது. இதையடுத்து உரிமையாளர் மீதான கோபத்தை காட்டுவதற்காக அவர் வீட்டில் இருந்த 54 இன்ச் டிவியை திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து நேற்று காலை இந்த பண்ணை வீட்டை பாதுகாவலர்கள் திறப்பதற்காக மாடிக்கு சென்றனர்.
ஓபிஎஸ்ஸின் ஓய்வறை
அப்போது ஓபிஎஸ்ஸின் ஓய்வறை உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓபிஎஸ்ஸுக்கும் பெரியகுளம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்கள் ஏதாவது கிடைத்ததா என சோதனை செய்தனர்.
முன்னாள் முதல்வர்
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் வீட்டிலேயே டிவி திருட்டு நடந்துள்ளதால் பெரியகுளம் காவல் துறை டிஎஸ்பி கீதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் கதவை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் குற்றம்சாட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல் அமைச்சர் துரைரமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி மலை மாஞ்சக்கொள்ளைபுதூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. அங்கு பணம், நகை இல்லாததால் கதவுகளை உடைத்த திருடர்கள், சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.