தமிழகத்தில் கர்நாடக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனரா? காவல் துறை விளக்கம்
தேனி: தேனியில் ஐயப்ப பக்தர்களுக்கு நடந்த சாலை விபத்தை மொழிப் பிரச்சனையாக மாற்ற முயற்சிக்கும் சமூவலைதள வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக ஐயப்ப பக்தர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது சாதாரண வாகன விபத்து மட்டுமே என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

மொழிப் புரியாததால் ஏற்பட்ட சிறு குழப்பத்தைத் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என ஐஜி விஜயேந்திர பிதாரி வலியுறுத்தினார்.
சபரிமலை யாத்திரை முடித்து தமிழகம் வழியாக கர்நாடகா திரும்பிய பக்தர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல், இரு மாநில எல்லைகளில் பதற்றத்தை உருவாக்கியது. வாகனத்தில் கர்நாடகக் கொடி கட்டியிருந்ததால் தாக்குதல் நிகழ்ந்ததாகக் கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இச்சூழலில், தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, உண்மை நிலையை விளக்கினார்.
தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து ஐஜி விஜயேந்திர பிதாரி விளக்கினார். "சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் மிகைப்படுத்தப்பட்டவை.
உண்மையில் அங்கு நடந்தது ஒரு சிறிய வாகன விபத்து மட்டுமே. கர்நாடக ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனத்தின் பின்னால் ஒரு லாரி மோதியுள்ளது. லாரி ஓட்டுநரின் தவறே இந்த விபத்துக்குக் காரணம். இதில் வாகனங்களுக்குப் பெரிய அளவில் சேதமில்லை."
கர்நாடக பக்தர்கள் இது குறித்துப் புகார் அளிக்காத நிலையிலும், காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, தேனியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளது, என அவர் தெரிவித்தார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா கவலை தெரிவித்த சூழலில், இரு மாநிலக் காவல்துறையினரும் தொடர்பில் உள்ளனர். மொழி தெரியாததால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட சிறு விவாதம், சமூக வலைதளங்களில் மாநிலங்களுக்கிடையேயான இனப் பிரச்சனையாகப் பெரிதாக்கப்பட்டது.
இதைச் சுட்டிக் காட்டி ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி எச்சரித்தார்: "ஒரு தனிப்பட்ட விபத்தைச் சர்வதேச அளவில் மொழிப் பிரச்சனையாக மாற்ற முயற்சி செய்யக் கூடாது. தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது."
காவல்துறையின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பைத் தமிழ்நாடு காவல்துறை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications