படிக்கிறதுக்கு நிதி இல்லைன்னா என்ன.. மக்களுக்கு சாப்பாடு இல்லையே.. நெகிழ வைத்த தேனி மாணவி!!
தேனி: விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசையுடன் செயல்பட்டு வந்த தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவி உதய கீர்த்திகா தனது படிப்புக்கு கிடைத்த பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.
தேனியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவி உதய கீர்த்திகா. இவருக்கு விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பது விருப்பம். உக்ரைன் நாட்டில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிக் கல்லூரியில் படிக்க கீர்த்திகாவுக்கு இடம் கிடைத்தது. ஆனால், இவரிடம் பணம் இல்லை. இதுகுறித்த செய்தி மீடியாக்களில் வெளியானது.

இதையடுத்து இவருக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நிதி குவிந்தது. இதை வைத்து முதல் கட்டப் படிப்பை முடித்தார். இரண்டாம் கட்டப் படிப்பிற்காக டெல்லியில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கான பைலட் பயிற்சி மையத்திற்கு செல்லவிருந்தார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக டெல்லி செல்ல முடியாமல் பயிற்சி தடைபட்டது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு உணவளிக்க தனக்கு கிடைத்த உதவிப் பணத்தை உதய கீர்த்திகா பயன்படுத்தியுள்ளார். அவரது படிப்புக்கு கிடைத்த உதவி நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாய்க்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வாங்கிக் கொடுத்தார்.
முதலில் நரிக்குறவர்களுக்கு உதவிய கீர்த்திகா இனி, தேனியில் இருக்கும் 400 குடும்பங்களுக்கு உதவ இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது இளகிய மனதை தேனி மக்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications