தேனி அரசு ஊழியர் சுதாதேவி.. புத்திசாலித்தனமாக செய்த வேலை.. சிவப்பு ஸ்கூட்டியில் சிக்கிய சில்வண்டு
தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுதாதேவி என்பவர் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கழுத்தில் 6 பவுன் தங்க சங்கிலி அணிந்துள்ளார். அவர் அண்மையில் வேலை முடிந்து போடி மீனாட்சிபுரம் விலக்கில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற இளைஞர் கைதானார். துப்பட்டாவுடன் தப்பியவர் ஸ்கூட்டருடன் சிக்கியது எப்படி என்று பார்ப்போம்.
தங்க நகையின் விலை தினசரி வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 15000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தங்க நகை 66000 ரூபாய் வரை விற்பனையாகிறது.. செய்கூலி சேதாரம், ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்தால் 72 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை ஒரு பவுன் தங்கம் விற்பனையாகிறது.

தங்கம் விலை இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டதால், அதை திருடுவதற்கு முயற்சிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தங்க நகைகள் வீட்டில் இருந்தால் அதை திருடுவதும் அதிகரித்துள்ளது. தங்க நகைகளை வழிபறி செய்வோரும் அதிகரித்துள்ளனர். தனியாக நடந்து செல்லும் பெண்கள் தங்க நகைகளை பறிகொடுப்பதும் அடிக்கடி நடக்கிறது. தேனி மாவட்டம் போடியில் நடந்துள்ள சம்பவம் பற்றி பார்ப்போம்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த 35 வயதாகும் சுதாதேவி என்பவர் தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவர், தினமும் போடியில் இருந்து தேனிக்கு அலுவலகத்துக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் இவர், வேலை முடிந்து பழனிசெட்டிபட்டியில் இருந்து பேருந்தில் ஏறினார்.
போடி அருகே மீனாட்சிபுரம் விலக்கில் இறங்கிய அவர், அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் அருகே சுதாதேவி வந்தார். அப்போது சுதாதேவியை பின்தொடர்ந்து ஸ்கூட்டரில் இளைஞர் ஒருவர் வந்தார். திடீரென சுதாதேவி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை அவர் பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாதேவி, அலறியபடி சாலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
சுதாதேவி தரையில் அமர்ந்து கொண்டதால், ஸ்கூட்டரில் இருந்தபடி அந்த இளைஞரால் தங்க சங்கிலியை பறிக்க முடியவில்லை. சுதாதேவியின் துப்பட்டா மட்டும் அவரது கையில் சிக்கியது. இதற்கிடையே சுதாதேவியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளார்கள். ஆனால் அதற்குள் அந்த இளைஞர் துப்பட்டாவுடன் அங்கிருந்து சிட்டாக ஸ்கூட்டரில் பறந்து சென்று விட்டார்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சுதாதேவி நேற்று புகார் கொடுத்தார். அதில், சிவப்பு நிற ஸ்கூட்டரில் வந்த இளைஞர் தன்னிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறினார். மேலும் சம்பவம் நடந்த நேரத்தில், சுதாதேவி ஸ்கூட்டரின் பதிவு எண்ணை பார்த்துள்ளார். அந்த பதிவு எண்ணையும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார். அதனை பயன்படுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுதாதேவியிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றது, போடி அருகே உள்ள தோப்புப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (23) என்று தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications