ஜக்கம்மா நெஞ்சுக்குள் ’மர்ம பொருள்’.. ஷாக்கான டாக்டர்கள்! வெளியே எடுத்தால்.. காத்திருந்த ட்விஸ்ட்!
தேனி: தேனியில் 50 வயது பெண் கூலி தொழிலாளியின் நுரையீரல் சுவாச குழாயில் 3 ஆண்டுகளாக சிக்கி இருந்த 'மர்ம பொருளை', ப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் ரத்தப்போக்கே இல்லாமல் அகற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பாதிப்பிலிருந்து குணமடைந்த பெண் கூலி தொழிலாளி தனது உயிரைக் காப்பற்றியதற்காக கண்ணீர் மல்க மருத்துவர்களுக்கு நன்றி கூறினார்.
விளையாட்டு சில நேரங்களில் வினையாகி போகும் என்பார்கள். சிறு பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக ஊசி, ரிமோட், காசுகள் உள்ளிட்டவற்றை வாயில் வைக்கும் போது, எதிர்பாராதவிதமாக அவற்றை விழுங்கி அவை மூச்சுக் குழாயிலும் நுரையீரிலிலும் சிக்கி உயிருக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

பெரியவர்கள் கூட சில நேரங்களில் அவசரப்பட்டு ஏதாவது ஒன்றை செய்து விடுவார்கள். அப்படி தேனியில் 50 வயது பெண் ஒருவர் கவனமின்றி சப்போட்டா பழத்தை சாப்பிட விதை அவரது மூச்சு குழாயில் சிக்கி இருக்கிறது. 3 ஆண்டுகளாக அது மூச்சுக் குழாயில் இருந்த நிலையில், தற்போது அதனை அகற்றி சாதனை படைத்திருக்கின்றனர் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்.
தேனி மாவட்டம் வடவீர நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வீரஜக்கம்மாள். 50 வயதான கூலி தொழிலாளியான இவர் கடந்த 3 ஆண்டுகளாகவே கடுமையான மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். பல மாதங்களாக பல மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சை பெற்றும் மூச்சு திணறல் குணமாகவில்லை. இதனால் அவர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார்.

மருத்துவர்கள் பரிசோதனையில் வீர ஜக்கம்மாளின் நுரையீரல் சுவாசக்குழாய் பகுதியில், இயல்புக்கு மாறான ஒரு பொருள் அடைப்பை ஏற்படுத்தி இருந்ததும், உடலுக்கு சம்பந்தமில்லாத அந்த பொருள் தான் அவருக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தி வந்ததும் தெரிந்தது, இதை அடுத்து பிரத்யோகமான சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் எடுத்த பின்னர் சுவாச குழாயில் சிக்கி இருக்கும், அந்த பொருளை நவீன சிகிச்சை மூலம் அப்புறப்படுத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
நுரையீரல் மற்றும் சுவாச பிரிவு தலைமை மருத்துவர் இலக்கியசெல்வன் உள்ளிட்ட மயக்க மருந்து மருத்துவர்கள் குழுவினர் நோயாளிக்கு அதிக ரத்தபோக்கு இல்லாமல் இருக்கும் வகையில் ப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் நுண் துளையிட்டு மேற்கொண்டு நுரையீரல் சுவாச குழாயில் அடைப்பை ஏற்படுத்தி வந்த மர்ம பொருளை லாவகமாக வெளியே எடுத்தனர்.

பெரும்பாலும் புற்றுநோய் கட்டிகள் இவ்வாறான அடைப்பை ஏற்படுத்தும் என்று கருதிய மருத்துவர்களுக்கு வியப்பு காத்திருந்தது. வெளியே எடுத்த அந்த பொருள் சப்போட்டா பழத்தின் கொட்டை என்பது தெரிய வந்ததும் மருத்துவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். நுரையீரல் குழாயில் சிக்கி இருந்த சப்போட்டா பழத்தின் கொட்டையை அகற்றிய உடனேயே வீர ஜக்கம்மாளுக்கு மூச்சுத் திணறல் முற்றிலுமாக நின்று விட்டது.

இதனைத் தொடர்ந்து முழு நலமுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். முழுகுணம் அடைந்த நோயாளி வீரஜக்கம்மாள் தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றார். வெளியில் சிகிச்சை பார்த்தால் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதால் ஏழை பெண்மணியின் சூழ்நிலையை அறிந்து இந்த சிகிச்சையை முயற்சி எடுத்து செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications