பட்டாவுக்கு லஞ்சம்.. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விஏஓ .. தேனி வீட்டில் இருந்த கோலம்
தேனி: தேனி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் விஜயன் என்பவர் தேவனதாப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த விஜயன் மீண்டும் பணியில் சேர முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் மது அருந்திவிட்டு படுக்கையில் உறங்கினார். மீண்டும் எழுந்திருக்கவே இல்லை.. அவரது நிலை குறித்து பார்ப்போம்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் என்பவர் கடந்த 2023ம் ஆண்டு நிலத்திற்கு பட்டா மாறுதல் மற்றும் தனி பட்டா கேட்டு குள்ளப்புரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்துள்ளார்.. ஆனால் அவருக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்களாம். இதையடுத்து ஈஸ்வரன், குள்ளப்புரத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி விஜயனை அணுகி உள்ளார். அவர் பட்டா வழங்குவதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. மேலும் லஞ்ச பணத்தை வடுகப்பட்டியில் உள்ள இளமுருகன் என்பவரிடம் கொடுக்கும்படி விஜயன் கூறினாராம்.

இதனால் கோபம் அடைந்த ஈஸ்வரன், தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கிய ரசாயனம் தடவிய 50 ஆயிரம் பணத்தை ஈஸ்வரன், இளமாறனிடம் கொடுத்தார். பின்னர், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், விஏஓ விஜயன், இளமாறனிடம் இருந்து பணத்தை பெற்ற நிலையில், இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த விஜயன் மீண்டும் பணியில் சேர முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி இரவு அவர் மது அருந்துவிட்டு தனது வீட்டின் படுக்கை அறையில் படுத்திருந்தார். அவருக்கு சாப்பாடு தயார் செய்து விட்டு அவரை அவருடைய மனைவி சுப்புலட்சுமி (40) எழுப்ப முயன்றுள்ளாராம். அப்போது அவர் பேச்சு, மூச்சின்றி இருந்தார். வீட்டுக்கு டாக்டர் ஒருவரை அழைத்து வந்து சோதித்து பார்த்துள்ளார்..
அப்போது அவர் இறந்து விட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜயனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications