தேனி எம்பி தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் இடையே கடும் சண்டை.. கலெக்டருக்கு ஷாக்
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழா நிகழ்ச்சி மேடையிலேயே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்- ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையே இருவரும் வாக்குவாதம் செய்த சம்பவத்தால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடர்ந்து, அடுத்ததாக தமிழக அரசு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை செயல்படுத்துகிறது. இன்று தமிழகம் முழுவதும் 'நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்' தொடக்க விழா மாவட்டம் தோறும் ஒரு இடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தினை பொறுத்தவரை ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி துவக்கப்பட்டு முகாம் நடந்தது.

வரவேற்பு பேனரில் படம்
முகாமின் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரின் படம் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தோடு மேடைக்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், புரோட்டாகால்படி தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் படம் வரவேற்பு பேனரில் எதற்கு இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதோடு மேடையிலேயே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன்
இதனால் கோபத்தில் அமர்ந்திருந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது, நான்தான் வழங்குவேன் என நலத்திட்ட உதவி வழங்கும் அட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனின் கையில் கொடுக்காமல் பிடுங்குவதாக வீடியோக்கள் வெளியாகின. இதனிடையே முட்டாள் என்று திட்டுவதாக கூறி தங்க தமிழ்செல்வனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தங்க தமிழ்செல்வன் வாக்குவாதம்
பதிலுக்கு தங்க தமிழ்செல்வமும் கடும் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோ வெளியானது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேடையிலேயே இருவரும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து துவக்க விழா நிகழ்ச்சி முழுமையாக நடைபெறாமல் பாதியிலேயே துவக்க விழா முடிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். முகாம் மட்டும் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் நடைபெறுகிறது. சண்டை தொடர்பான வீடியோ செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது பாருங்கள்.












Click it and Unblock the Notifications