10 வயதிலேயே நாடகம்.. பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தில் வெளியான "ஷாக்" உண்மை - அலறும் தேனி
தேனி: தேனியில் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டதாக வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை மக்கள் துவைத்து எடுத்த நிலையில், அது மாணவர்கள் போட்ட கடத்தல் நாடகம் என்பது தெரியவந்துள்ளது.
பத்து வயதே ஆன சிறுவர்கள் கூறிய பொய், ஒரு ஊரையே கலங்கடித்த சம்பவத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா என தெரியாமல் மக்கள் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.
இதனிடையே, எந்த தவறும் செய்யாத அப்பாவி வட மாநில இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புலியை விட்டுட்டு எலியை பிடிக்குறாங்க! ஓபிஎஸ் வாரிசுக்கு எதிராக திரண்ட தேனி! விட மாட்டாங்க போலயே?
பள்ளிக்கு வராத மாணவர்கள்
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் உள்ள சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு 5-ம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளி முதல்வர் அந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கு வராததை கூறியுள்ளனர்.
போர்வையை மூடி கடத்தல்..
இதனால் பதறிப்போன அவர்கள், மாணவர்கள் பள்ளிக்கு புறப்பட்டு வந்ததாக தெரிவித்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்காத நிலையில், அங்குள்ள வாய்க்காலுக்கு அருகே அவர்கள் நின்று கொண்டிருப்பதை ஒரு மாணவனின் தந்தை பார்த்துள்ளார். உடனே அங்கு சென்று, "பள்ளிக்கு செல்லாமல் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்" என அவர் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் சற்றும் யோசிக்காமல், தங்களை ஒருவர் போர்வையில் மூடி கடத்தி வந்ததாக கூறினார்.
அடித்து நொறுக்கப்பட்ட வட மாநில இளைஞர்
இதனை நம்பிய அவரும், அந்த நபரை அடையாளம் காட்டும் படி கூறியுள்ளார். அப்போது சரியாக அந்தப் பகுதியில் தள்ளுவண்டியில் துணிகளை விற்றபடி வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வரவே, அந்த மாணவர்கள் இவர்தான் தங்களை கடத்தி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, அந்த மாணவனின் தந்தை என்ன ஏது என்று கூட கேட்காமல் வட மாநிலத்தவரை சரமாரியாக தாக்கினார். அவருக்கு தமிழ் புரியாததால், எதற்காக தன்னை அடிக்கிறார்கள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. பிறகு, ஊர் மக்களுக்கும் அவர் தகவல் அளிக்கவே அவர்களும் அங்கு வந்து வட மாநிலத்தவரை மரத்தில் கட்டி வைத்து பிரிந்து மேய்ந்தனர்.
அம்பலமான கடத்தல் நாடகம்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து வட மாநில நபரை மீட்டனர். பின்னர் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்று விசாரித்ததில், அவர் அப்பாவி என்பது தெரியவந்தது. அதற்குள்ளாக, மாணவர்களின் பெற்றோரும், ஊர் மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய தொடங்கினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட 3 மாணவர்களையும் போலீஸார் விசாரித்ததில், அவர்கள் கூறியது அனைத்தும் பொய் என்பது தெரியவந்தது. பள்ளியை 'கட்' அடித்து சுற்றிய போது, திடீரென தாங்கள் மாட்டிக் கொண்டதால் இந்த கடத்தல் நாடகம் போட்டதாக அவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து, அப்பாவி இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.