திருமணம் நடந்து ஒரு மாசம்தான் ஆச்சு.. விருந்துக்கு சென்ற இடத்தில் புதுமண தம்பதி ஆற்றில் மூழ்கி பலி
தேனி: திருமண விருந்துக்காக உறவினர் வீட்டிற்குச் சென்ற புதுமண தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம் அப்பகுதி மக்களுக்குச் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பருவ மழை காரணமாகத் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் அதிகப்படியான நீர் சென்று வருகிறது.
இதன் காரணமாக ஆறுகளில் குளிக்கச் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நீச்சல் தெரியாதவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது..

போடி
அதையும் தாண்டி சில இடங்களில் ஆற்றில் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும் போது எதிர்பாராத சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் தேனி மாவட்டத்தை அடுத்துள்ள போடியில் நடந்துள்ளது. கோம்பை ஆற்றில் குளிக்கச் சென்ற பொழுது தவறி விழுந்து புதுமனை தம்பதியர் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் திருமணம்
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார். முன்னாள் ராணுவ வீரரின் மகனான, இவர் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் மாமா ராஜா. தேனியைச் சேர்ந்த ராஜாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோவையைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து உள்ளது. அப்போது லண்டனில் இருந்ததால் சஞ்சய் குமாரால் தனது தாய்மாமா ராஜா திருமணத்திற்கு வர முடியவில்லை.

கோம்பை ஆறு
கடந்த சில நாட்களுக்கு முன்பு, லண்டனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய சஞ்சய் குமார், திருமணத்திற்கு வர முடியாத காரணத்தினால் போடியில் உள்ள தனது வீட்டில் விருந்திற்காக இருவரையும் அழைத்துள்ளார். இந்தச் சூழலில் இன்று காலை ஆற்றில் சென்று குளிக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக இன்று காலை கோம்பை ஆற்றில் குளிக்கப் புதுமண தம்பதியரை சஞ்சய் குமார் அழைத்துச் சென்றுள்ளார்.

என்ன நடந்தது
அவர்களுடன் சித்தி மகன் பிரணவ் என்ற சிறுவனும் உடன் சென்று உள்ளான். போடியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பெரியாற்றுக் கோம்பை ஆற்றில் உள்ள பதினெட்டாம்படி கேணியில் குளிக்கச் சென்று உள்ளனர். ஆற்றில் குளிக்கச் சென்ற போது சஞ்சய் குமார் பாறையில் வழுக்கி விழுந்து, சுழலில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராகச் சென்றுள்ளனர்.

உயிரிழப்பு
அனைவரும் ஆற்றில் விழுந்த நிலையில், அனைவருக்கும் பலத்த காயமடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை எப்படியோ சமாளித்து சிறுவன் பிரணவ் மட்டும் கரையேறி உள்ளான். அவன் எப்படியோ சமாளித்து உறவினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளான். இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினருக்கும் மூவரின் உடலையும் மீட்டனர்

சோகம்
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்த ஒரே மாதமான தம்பதியினரும் வெளிநாட்டில் இருந்து 4 நாட்களுக்கு முன் திரும்பிய இளைஞரும் ஒரே சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் போடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications