ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
தேனி: தேனி மாவட்டம் முழுமையாக விவசாயம் சார்ந்த பகுதியாகும். தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு தொழிலாளர்கள் பலரும் தினசரி சென்று விடுவதால் கூலியாட்கள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள்.
தேனி மாவட்டம் என்பது முப்போகம் விளையும் விவசாய பூமி. முல்லை பெரியாறு, வைகை, வராக நதி, மஞ்சளாறு, கொட்டக்குடி ஆறு, மஞ்சளாறு, வரட்டாறு என மாவட்டம் முழுவதும் ஏராளமான நதிகள் ஓடுகின்றன.மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் நெல், கரும்பு, திராட்சை, சின்ன வெங்காயம், தக்காளி, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

தேனி மாவட்டத்தை ஒட்டிய மலைப்பகுதிகளை பொறுத்தவரை, ஏலக்காய், தேயிலை,காபி, மிளகு, எலுமிச்சை, மாம்பழம் போன்றவை அதிக அளவில் பயரிடப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் மாவட்டத்தில் பூக்கள் பறித்தல், காய்கறிகள் பறித்தல், வாழைத்தார் வெட்டுதல், இலவம் பஞ்சு காய்கள் பறித்தல், தோட்ட பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள கூலி ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.
தற்போது பயிர்கள் எல்லாம் விளைந்துவிட்ட நிலையில், கூலி ஆட்கள் கிடைக்காத காரணத்தால் அறுவடை செய்து சந்தைக்கு அனுப்புவதில் சிக்கல் எழுந்தள்ளது. காரணம் கூலியாட்கள் எல்லாம், வேட்பாளர்களின் பிரச்சாரக்கூட்டங்களுக்கு செல்வது தான் காரணம் என்கிறார்கள் விவசாயிகள்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் தேனி மாவட்டத்தில் களை கட்டியுள்ளது. இந்த முறை தேனியில் பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் நிற்கிறார். இதேபோல் திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் நிற்கிறார். அதிமுக சார்பில் நாராயணசாமி நிற்கிறார். தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் முடிந்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் சார்பில், தேர்தல் பிரசார கூட்டங்கள், வேட்பு மனு தாக்கல் ஊர்வலம் போன்றவை நடந்து வந்தன. தற்போது அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் நடந்து வருகின்றன.
தேனி மாவட்டத்தில் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரத்துடன், அரசியல் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரம் செய்ய வருகை தந்த வண்ணம் உள்ளார்கள். விவசாய கூலிவேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பலரும் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் . விவசாய பணியை பொறுத்தவரை எல்லாம் காலை 7 மணிக்கு விவசாய பணிக்கு வருபவர்கள் பிற்பகல் வரை பணியாற்றுவார்கள்.
தற்போது பிரச்சாரம் காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுக்கிறார்கள், சில அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்துச் செல்லும் மக்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்.இந்த பணம் எப்படி என்றால் நாள் முழுவதும் தோட்டத்தில் பணியாற்றுவதில் கிடைக்கும் பணத்தைவிட அதிகமாகும். சில மணி நேரம் பிரசார கூட்டங்களுக்கு சென்றாலே அன்றைக்கு வேலைக்கு போனால் கிடைக்கும் ஊதியத்தைவிட அதிகமாக தருகிறார்கள். இதனால் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரசாரங்களில் பங்கேற்க ஆர்வம் காட்டுகிறார்கள். தேர்தல் பிரசாரங்கள் முடியும் வரை விவசாய வேலைக்கு தேனியில் ஆள் கிடைப்பது கடினம் என்கிறார்கள் தேனி மாவட்ட விவசாயிகள்..'












Click it and Unblock the Notifications