தேனியில் இரட்டை இலையால் டிடிவி தினகரனுக்கு சிக்கல்.. அப்படி மட்டும் நடந்தால்.. கவலையில் பாஜக கூட்டணி
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து இந்த முறை நேரடியாக களம் இறங்கி உள்ள டிடிவி தினகரன், திமுகவும், எடப்பாடி பழனிசாமியும் கள்ளக்கூட்டணி வைத்துள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தால் தனக்கு விழும் வாக்குகள் பிரியும் என்று கவலை அடைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற போகிறது. வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பு மனு பரிசீனை முடிந்துவிட்ட நிலையில், வேட்பாளர்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அனல் பறக்கும் வெயிலுக்கு நடுவே பிரச்சாரமும் அனல் பறக்கிறது. திமுக தலைவர்கள் அதிமுக மற்றும் பாஜக குறித்து கடுமையாக விமர்சிப்பதும், பாஜக தலைவர்கள் திமுகவை மிக கடுமையாக விமர்சிப்பதும், அதிமுக தலைவர்கள், திமுக, பாஜக என இரண்டு தரப்பையும் விமர்சிப்பதுமாக பிரச்சாரம் இருக்கிறது.

தேனி லோக்சபா தொகுதியை பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் களம் இறங்கி உள்ளார். திமுக சார்பில் ஒரு காலத்தில் அவரது சிஷ்யராக இருந்த தங்கத்தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார்.
அமமுக சார்பில் களம் இறங்கி உள்ள டிடிவி தினகரன் தேனி தொகுதி முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். தேனியில் தனக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு, முக்குலத்தோர் வாக்கு, ஓ பன்னீர்செல்வம் தன்னுடன் கூட்டணியில் இருப்பது போன்ற காரணங்களால் எப்படி வென்றுவிட வேண்டும் என்று உற்சாகத்தில் இருந்தார்.
இதனிடையே தேனியை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாகும்.. அங்கு வாக்குகள் இந்த முறை அமமுக, அதிமுக என பிரியும் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் வாக்குகள் அப்படியே விழுந்தால் தான் டிடிவி தினகரனின் வெற்றி எளிதாகும்.. இல்லாவிட்டால் மிகவும் கடினமாகும் என்கிறார்கள். இதனால் கவலை அடைந்துள்ள டிடிவி தினகரன், ஓட்டை பிரிக்க வேண்டும் என்று அதிமுக தேனியில் நிற்பதாகவும். இரட்டை இலையை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
நேற்று பிரசாரத்தின் போது டி.டி.வி.தினகரன் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் நாங்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினோம். அதற்கு நன்றிக்கடனாக என்னை அதிமுகவில் இருந்து நீக்கினார். அப்படி என்னை கட்சியை விட்டு நீக்கியதால் உருவான இயக்கம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி டெபாசிட் கூட வாங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்று பணம் கொடுத்தார்கள். ஆனால், அந்த பணம் எல்லாம் வேலை செய்யவில்லை.. அங்கு நான் அ.தி.மு.க.வைவிட 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அங்கே கிடைத்த சின்னம் தான் குக்கர் சின்னம்.
இப்போது தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார்கள்.. அது தான் நிஜமான உண்மை. தி.மு.க. மீது மக்கள் வெறுப்பாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிரான வாக்குகள் பாஜக கூட்டணிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். கொடுத்த சின்னத்தில் கருணாநிதி மகனுக்கு உதவி செய்வதற்காக நிற்கிறார்கள் ஓட்டை பிரித்தால் எங்கள் வெற்றியை பாதிக்கும் என்று நினைக்கிறார்கள். இரட்டை இலையை தவறாக பயன்படுத்துகின்றனர்" இவ்வாறு டிடிவி தினகன் ஆவேசமாக பேசினார். இதனிடையே டிடிவி தினகரனை பலரும் அதிமுகவினர் என்றே நினைப்பவர்கள் தேனி பக்கம் உண்டு. பழக்க தோஷத்தில் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் என்னாவது என்று பாஜக கூட்டணியினர் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications