எடப்பாடி படத்தை எரிச்சாங்களே.. டக்குனு வந்து விழுந்த கேள்வி.. பாஜகவினருக்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்
எடப்பாடி பழனிசாமி படம் எரிப்பு குறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
தேனி: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தைக் கோவில்பட்டியில் பாஜகவினர் எரித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். தொண்டர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பாஜகவும் அதிமுகவும் ஒரே கூட்டணியில் இருக்கும் போதிலும், கடந்த சில நாட்களாக அங்குச் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வரிசையாக விலகி அதிமுகவில் தொடர்ந்து இணைந்தனர்.
இது இரு கட்சிக்கும் இடையே இருக்கும் உறவைச் சிக்கலில் தள்ளியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து காட்டமான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

பாஜக நிர்வாகிகள் விலகல்
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாகவே பாஜக அதிமுக ஒரே அணியில் இருந்து வருகிறது. மக்களவை, சட்டசபைத் தேர்தல்களை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தே சந்தித்தது. இந்தச் சூழலில் பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். மேலும், வரும் பல பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது பாஜக தரப்பிற்கு அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணியில் சிக்கல் என்றெல்லாம் கூட கூறப்படுகிறது.

பரபர கருத்துகள்
இதையடுத்து இரு தரப்பும் சில பரபர கருத்துகளைக் கூறி வருகிறது. குறிப்பாக அமர் பிரசாத் ரெட்டி ரெட்டி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சாடும் வகையில் ட்வீட் செய்திருந்தார். அவரது கருத்திற்கு அதிமுக ஐடி விங்கின் சிங்கை ராமச்சந்திரன் பதிலடி கொடுத்திருந்தார். நோட்டாவை விடக் குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி எம்.எல்.ஏ.க்களை வென்றது என்பதே இதற்கான பதில். அதிமுக யார் தயவும் இன்றி, தனித்துப் போட்டியிட்டுத் தேர்தல்களை வென்ற இயக்கம் என்று சாடி பதிவிட்டிருந்தார்.

எடப்பாடி படம் எரிப்பு
இந்தச் சூழலில், கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக இளைஞரணியினர் எரித்தனர். பாஜகவின் மாநில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததைக் கண்டித்து, எடப்பாடியின் படம் எரிக்கப்பட்டதாக பாஜக இளைஞரணியினர் தெரிவித்துள்ளனர் மேலும், அவர்கள் அண்ணாமலை குறித்து போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் எடப்பாடி ஒரு துரோகி என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

அண்ணாமலை
ஓபிஎஸ் தாயார் சமீபத்தில் மறைந்த நிலையில், பெரியகுளத்தில் அவரது படத்திற்கு அண்ணாமலை பாஜக தொண்டர்களுடன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "ஓபிஎஸ் தாயார் மறைந்த அன்றே, ஓபிஎஸிடம் தொலைப்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தேன். தொடர்ந்து அவருடன் பேசிக் கொண்டு தான் இருந்தேன். இடையில் கர்நாடக தேர்தல் பணிகள் காரணமாக நேரில் வர முடியவில்லை. இன்று நேரடியாக இரங்கல் தெரிவிக்கவே வந்துள்ளேன். நமது பிரதமர் மோடியும் ஓபிஎஸுக்கு கடிதம் மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த மீளாத துயரத்தில் இருந்து அவர் மீண்டு வர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்" என்றார்.

உணர்ச்சிவசப்பட வேண்டாம்
தொடர்ந்து பாஜகவினர் எடப்பாடி படத்தை எரித்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, "இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. விமானத்தில் இருந்ததால் பார்க்கவில்லை.. தொண்டர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு இப்படிச் செய்திருக்கலாம். இருந்தாலும் அப்படி செய்யாதீர்கள். அனைவரும் அவர்கள் கட்சியை வளர்க்கத் தனியாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை பாஜகவினர் வழங்க வேண்டும்.. உணர்ச்சிவசத்தில், கட்சிக் கொள்கைக்கு எதிராக பாஜகவினர் செயல்பட வேண்டாம்.

யாரும் எதுவும் சொல்லக் கூடாது
யூடியூபில் சிலர் பேசுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துகள் கூறுகின்றனர். அப்படியெல்லாம் யாரும் எதுவும் செய்யக் கூடாது. கட்சியினர் அதிகாரப்பூர்வ கொள்கைகளைத் தாண்டி யாரும் எதுவும் சொல்லக் கூடாது" என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து வட மாநிலத்தவர் விவகாரம் குறித்த கேள்விக்கு, வடமாநிலத்தவர் விவகாரத்தில் நாங்கள் தேசியளவில் தமிழ்நாடு அப்படிப்பட்ட மாநிலம் இல்லை என்பதையே தொடர்ந்து கூறி வருகிறோம் என்றும் ஆளும் திமுக தரப்பினரே பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications