பித்தலாட்டம்.. வெடித்த அண்ணாமலை.. 'வலிமை மிகுந்த அண்ணன் ஓபிஎஸ் மீண்டு வருவார்'.. பரபரப்பு பேச்சு
"வலிமை மிகுந்த அண்ணன் ஓபிஎஸ் மீண்டு வருவார்" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேனி: "வலிமை மிகுந்த அண்ணன் ஓபிஎஸ் மீண்டு வருவார்" ஆண்டவன் முழுமையாக அரவணைப்பார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , தேனி மாவட்டம் பெரியகுளத்திலுள்ள ஓ.பி.எஸ் இல்லத்துக்கு வருகை தந்து இரங்கல் தெரிவித்தார். பின்னர் ஓ பன்னீர்செல்வம், அவரின் சகோதரர் ஓ.ராஜா, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, "வலிமை மிகுந்த அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் அன்னையார் பழனியம்மாள் சில நாட்களுக்கு முன்பு காலமானார். அப்போது கர்நாடகா தேர்தல் பணியில் இருந்த நான், தொலைப்பேசியில் அழைத்து பாஜக சார்பில் அண்ணன் ஓ பன்னீர்செல்வத்திற்கு இரங்கல் தெரிவித்தேன். தொடர்ந்து பேசியும் வந்தேன். இதேபோல் மரியாதைக்குரிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு கடிதம் மூலம் இரங்கல் தெரிவித்தார்.

ஆறுதல்
ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது தாயார் மறைவு துக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவார். ஆண்டவர் முழுமையாக அண்ணனை (ஓபிஎஸ்) அரவணைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். அத்தோடு நானும், பாஜக தொண்டர்களும் இங்கு வந்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் மறைவுக்கு இங்கு வந்தேன். மறுபடியும் துக்ககர நிகழ்ச்சிக்கு வந்தது வருத்தமாக உள்ளது. அதில் இருந்து மீண்டும் அண்ணன் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

அண்ணாமலை கோரிக்கை
அப்போது செய்தியாளர்கள் அண்ணாலையிடம், பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கிறார்களே என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, எனக்கு தெரியவில்லை. நான் மதுரை விமான நிலையத்தில் இருந்து நேராக இங்குதான் வந்துள்ளேன். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தார்மிக அடிப்படையில் தகுந்த மரியாதை வழங்க வேண்டும். அவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்று இப்படி செயல்படுகிறார்கள். எனவே நம் கட்சி நிர்வாகிகள் யாரும் உணர்ச்சிவசப்படக் கூடாது. தொண்டர்கள் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறிச் செயல்படக் கூடாது என்றார்.

திமுக மீது தாக்கு
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை பற்றி உங்களுக்கு தெரியும். வடமாநில தொழிலாளர்களுக்காக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக மக்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்குவதாக பரவுவது வதந்தி என்பதை இந்திய அளவில் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். வடமாநிலத்தவருக்கு ஆதரவாக நாங்கள் பேசியதை விட்டுவிட்டார்கள். ஆனால் திமுக தலைவர்கள் வட இந்தியர்கள் குறித்து பேசியதை குறிப்பிட்டதால், வழக்கு பதிவுசெய்கிறார்கள்.

பித்தலாட்டம்
திமுகவின் அரசியல் கொள்கை என்பது பிரிவினைவாதம், வடக்கு தெற்கு என பேசியவர்கள். அப்போதே திராவிடிஸ்டான் வேண்டும் என்று கேட்டவர் தந்தை பெரியார். அவர்களது வழித்தோன்றல்களாக இன்று திமுகவினர் இருக்கின்றனர். திராவிடிஸ்டான் கேட்டதை அப்போதே அம்பேத்கர் ஆதரிக்கவில்லை. அதையெல்லாம் மறைத்துவிட்டு, தற்போது தி.மு.க-வினர் ஒரு யுனைடெட் இந்தியா' வேண்டும் என்று பேசுவது பித்தலாட்டம்" என அண்ணாமலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications