ஓ.பி. ரவீந்தரநாத் தோட்டத்தில் மின்வேலியால் இறந்த சிறுத்தை.. வழக்கு பாய்ந்தது யார் மீது தெரியுமா?
தேனி: தேனி பெரியகுளத்தில் ஓபிஎஸ்ஸின் மகனுக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
தேனி பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப்பகுதி உள்ளது. இங்கு தேனி எம்பியும் ஓபிஎஸ்ஸின் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
வன பகுதியையொட்டி உள்ள தோட்டம் என்பதால் இங்கு வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதை தடுக்க மின் வேலி அமைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

தோட்டம்
இந்த நிலையில் இந்த தோட்டத்திற்கு வந்த சிறுத்தை ஒன்று மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், கால்நடை துறை மருத்துவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அங்கு சிறுத்தைக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

குழி தோண்டி புதைத்தல்
பின்னர் அந்த தோட்டத்திலேயே குழி தோண்டப்பட்டு அந்த சிறுத்தை எரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் மின் வேலி அமைத்ததாக தோட்டத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மாறாக அவரது தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டு மந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உரிமையாளர் மீது வழக்கு பதிவு இல்லை
உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அப்பாவி மீது வழக்குப் பதிவு செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் விசாரணையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று பழுதடைந்த சோலார் வேலியில் சிக்கியதாக தகவல் கிடைத்தது. அதன்படி வனத்துறையினர் மீட்க சென்ற போது அந்த சிறுத்தை உதவி வன பாதுகாவலரின் கையை கடித்துவிட்டு தப்பிவிட்டது.

காயமடைந்த வன ஊழியர்
இந்த நிலையில் காயமடைந்த வனத்துறை ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் தப்பி சென்ற சிறுத்தை அங்குள்ள மின்வேலியில் சிக்கியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஓபிஎஸ் மகன் தோட்டம்
ஓபிஎஸ் மகனின் தோட்டத்தில் ஏற்கெனவே பல முறை சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து டிஜிபியும் தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அடிக்கடி சிறுத்தைகள் உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் உயிரினங்கள் உள்ளே வருவதால் மின்வேலி அமைக்கப்பட்டதா என்ற கேள்வியும் விலங்குகள் நல ஆர்வலர்கள் வைத்துள்ளார்கள்.

ஆக்கிரமித்தால் இதுதான் நடக்கும்
வன விலங்குகள் செல்லும் பாதைகளை ஆக்கிரமித்து விட்டு பின்னர் அவற்றின் நடமாட்டத்தை தடுக்க இது போல் மின் வேலி வைத்து அவற்றை கொல்வது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். எனவே இந்த சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது தவறு என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications