உளவுத்துறை மூலம் போன தகவல்.. அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக்கப்பட காரணம்: போட்டு உடைத்த தங்கம்!
தேனி: அதிமுகவை விட்டு டிடிவி தினகரனை 14 ஆண்டுகள் விலக்கி வைத்ததற்கு காரணம் இது தான் என தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கி உள்ளார். அவருக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக சார்பில் நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் களம் சூடுபிடித்துள்ளது.

டிடிவி தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.கவில் ஒன்றாக இருந்தவர்கள். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டு டிடிவி தினகரன் தனியாகச் செயல்பட்டபோதும், அமமுகவை தொடங்கிய போதும் அவருக்கு வலது கரமாக இருந்தார் தங்க தமிழ்ச்செல்வன். பின்னர் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது டிடிவி தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் நேருக்கு நேர் மோதுவதால் தேனி இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச் செல்வன், “தேனியில் விமான நிலையம் கொண்டு வருவேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். என்ன நினைத்து பேசுகிறார் என புரியவில்லை. இது எப்படி சாத்தியமாகும்?
மதுரையில் விமான நிலையம் வைத்துக் கொண்டு 30 கிலோ மீட்டரில் இன்னொரு விமான நிலையம் கொடுப்பார்களா எப்படி சாத்தியமாகும்? திண்டுக்கல் சபரி மலை ரயில்பாதை வரும். முல்லை பெரியாறில் பேபி அணையை பலப்படுத்தி தண்ணீரை தேக்குவோம்., உசிலம்பட்டி, தேனி, போடியில் புறவழிச்சாலை, 58 கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வர ஏற்பாடு செய்வோம்.” என்றார்.
மேலும் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், “டிடிவி தினகரன் 14 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து விலக்கி வைத்தது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் காரணத்தை பொது மேடையில் பேசியிருக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே, டிடிவி தினகரன் அதிமுகவினரை தன் பக்கம் இழுத்து முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக முடிவெடுத்தது தொடர்பாக உளவுத்துறை கொடுத்த அறிக்கையின் காரணமாக தான் அவரை கட்சியை விட்டு நீக்கி 15 வருடம் வனவாசம் போக வைத்தார்.
எனவே டிடிவி தினகரன் நல்லதுக்கு வனவாசம் போகவில்லை. துரோகம் செய்ததால் தான் வனவாசம் அனுப்பப்பட்டார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததால் சசிகலாவையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்கி வைத்திருந்தார்கள் இது தான் உண்மையில் நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications