தேனி அருகே மது போதையில் ஜாலியாக பைக்கில் வந்த இளைஞர்கள்.. தீபாவளி நாளில் நடந்த சோகம்
தேனி: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீபாவளி கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவம் நேற்று தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.. பட்டாசு வெடித்து, இனிப்புகளை ருசித்து, புத்தாடைகள் அணிந்து, உறவினர்களை சந்தித்து உறவுகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். பலர் தீபாவளி பண்டிகைக்கு உறவினர்கள் வீட்டுக்கு சென்றார்கள். இதேபோல் சிலர் சுற்றுலா சென்றார்கள். அப்படி சென்ற இளைஞர்கள் சிலர் விபத்திலும் சிக்கினார்கள்.. அப்படி தேனி அருகே நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், 2 இருசக்கர வாகனங்களில் 5 இளைஞர்கள் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள். உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அதனைக் கண்ட அப்பகுதியினர், உடனடியாக அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த, 2 இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து , தகவலறிந்து வந்த கூடலூர் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கூடலூர் நகர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய 5 இளைஞர்களும் கூடலூர் பகுதியில் ஒரே தெருவைச் சேர்ந்த நண்பர்கள் என்பது தெரியவந்தது. வாகனத்தில் சென்றது லிங்கேஷ்(24), சேவாக்(23), சஞ்சய்(22), மோனிஷ்(22), கேசவன்(22) என்பதும், தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் விளையாடிக் கொண்டு, அதிவேகத்தில் சென்றதும் விபத்துக்குக் காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுபோதையில் ஆபத்தான முறையில் விளையாட்டுத்தனமாகபயணித்த காரணத்தால், லிங்கேஷ், சேவாக், சஞ்சய் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோனிஷ் மற்றும் கேசவன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீபாவளி பண்டிகையின் போது, விபத்தில் சிக்கி 3 இளைஞர்கள் பலியான சம்பவம் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications