என்னை அவர் அடித்ததில் மகிழ்ச்சி! திருமாவளவன் அறைந்தது குறித்து இளைஞர் விளக்கம்
தேனி: தேனியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் அறை வாங்கிய இளைஞர், "என் தலைவர் என்னை அடித்தாலும் அது என் நன்மைக்கே" என வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கடந்த புதன்கிழமை இரவு திருமாவளவன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அடங்க மறுத்து அத்துமீறிய சிறுத்தைகளில் சிலர் பிரச்சார வாகனத்தில் ஏற முயன்றனர். மேலும் திருமாவுடன் செல்பி எடுக்க போட்டி போட்டுக் கொண்டனர்.
எல்லோரையும் அமைதியாக இருக்குமாறும், வாகனத்தில் ஏற வேண்டாம் என்றும் தேவையில்லாமல் அசம்பாவிதம் நடக்காமல் அனைவரும் வீடு போய் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆனால் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் பிரச்சார வாகனத்தின் முன் பக்கத்தில் இளைஞர் ஏறுவதை பார்த்த திருமாவுக்கு கோபம் வந்துவிட்டது. அவரை இறங்குமாறு அறிவுறுத்தியும், மேலும் மேலும் முன்னேறி கொண்டே திருமாவளவனிடம் வந்தார்.
உடனே அந்த இளைஞரின் கன்னத்தில் பளார் என திருமா அறைந்த காட்சிகள் வைரலாகின. அந்த இளைஞரும் கப் சிப் என இறங்கிவிட்டார். இந்த காட்சிகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. நடிகை விந்தியா கூட திருமாவளவனை விமர்சித்து பேசினார்.
"பரோட்டாவுக்கு சைடு டிஷ் குருமா, திமுகவுக்கு சைடு டிஷ் திருமா.." என விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அன்றைய பிரச்சாரத்தில் பலரும் இதே போல் அத்துமீற நினைத்த நிலையில் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு திருமா புறப்பட்டார்.
இந்த நிலையில்தான் திருமாவளவனிடம் அறை வாங்கிய இளைஞர் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு எழுச்சித் தமிழர் வாக்கு சேகரிக்க பெரியகுளத்திற்கு வந்த போது மதுபோதையில் நான் அட்டகாசம் செய்ததாக சமூகவலைதளங்களில் செய்தி வைரலானது.
எனக்கு மது பழக்கமே கிடையாது, நான் குடிக்கவே மாட்டேன். 10 ஆண்டுகள் கழித்து எங்கள் பகுதிக்கு வந்ததால் உணர்ச்சிமிகுதியில் அவரது வாகனத்தில் ஏறிவிட்டேன். அவர் மீதிருந்த பாசத்தில் அவருக்கு முத்தம் கொடுக்க சென்றேன்.
வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. ஆனால் என்னை பற்றியும் திருமா பற்றியும் சமூகவலைதளங்களில் தவறாக செய்தி பரவி வருகிறது. அவர் என்னை அடித்ததில் எந்த ஆட்சேபனையும் கிடையாது. என் அப்பா என்னை அடித்தது போல் கருதுகிறேன். என் நன்மைக்காக அடித்ததாகவே நினைக்கிறேன். என்னை அவர் அடித்ததில் மகிழ்ச்சிதான். இவ்வாறு அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications