நெல்லை அருகே 2 பெண்கள் கொடூர கொலை.. தலையை வெட்டி கால்வாயில் வீச்சு.. பகீர் காரணம்
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வீடு புகுந்து 2 பெண்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதல் விவகாரத்தில் பழிக்குப் பழியாக இருவரையும் கொன்று தலையை வெட்டி கால்வாயில் வீசியுள்ளனர்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி, மாடன் கோயில் பகுதியில் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி சண்முகத்தாய் (50). இவர்களது மகன் நம்பிராஜன் (21). இவர் அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதியை (18) கடந்த ஆண்டு அக்டோபரில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், பெண் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லை டவுன் வயல் தெருவில் தனி வீடு எடுத்து தம்பதியர் வசித்து வந்தார்கள். கடந்தாண்டு நவம்பர் 25ம் தேதி இரவு வான்மதியின் உறவினர்கள், நம்பிராஜனை மது குடிக்க அழைத்துச் சென்று கொலை செய்திருக்கிறார்கள். வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, உறவினர்கள் முத்துப்பாண்டி, செல்லத்துரை, முருகன், விஸ்வநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நம்பிராஜன் கொலை
நம்பிராஜனை கொலை செய்த செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் (52) நாங்குநேரி அண்ணா சாலையில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார் அவரையும், உதவியாக இருந்த உறவினர் சொரிமுத்து மகன் சுரேஷ் (20) என்பவரையும் கடந்த மார்ச் 14ம் தேதி நம்பிராஜன் தரப்பினர் பழிக்குப்பழியாக கொன்றார்கள். இதுதொடர்பாக நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய், தந்தை அருணாசலம், அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிபாண்டி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

என்ன நடந்தது
இந்நிலையில் நேற்று மதியம் மறுகால்குறிச்சிக்கு இருசக்கர வாகனங்களில் வந்த 12 பேர் கொண்ட கும்பல், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள இசக்கிபாண்டி வீட்டின் மீது வெடிகுண்டு வீசினர். அப்போது அவரது தாய் சாந்தி (40) வெளியே வர முயன்றார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.

தலையை வெட்டினர்
பின்னர் அந்த கும்பல் நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய் வீட்டுக்கு சென்று அவரது வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. உடனே சண்முகத்தாய் பக்கத்து வீட்டு குளியலறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். இருப்பினும் வெறிகொண்டு நுழைந்த கும்பல், குளியலறை மீது வெடிகுண்டை வீசியது. இதில் கதவு உடைந்து உள்ளே இருந்த சண்முகத்தாயின் உடல் சிதறியது. இருப்பினும் வெறி அடங்காமல் கும்பல் அவரது தலையை வெட்டி எடுத்து தெருவோர கழிவுநீர் கால்வாயில் வீசியது.

குற்றவாளிகள் மீது வழக்கு
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து நெல்லை எஸ்பி மணிவண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய கும்பலை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications