தோண்டத் தோண்ட வெளி வந்த பைக்குகள்.. பதற வைத்த செங்கோட்டை கிணறு
நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கிராமத்து கிணற்றிலிருந்து மோட்டார் சைக்கிள்களாக வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை அருகில் உள்ள விஸ்வநாதபுரம் பெரியபிள்ளை வலசை செல்லும் சாலையில் விசுவநாதபுரத்தை சேர்ந்த இருளப்ப தேவர், கோட்டைச்சாமி தேவர் ஆகியோருக்கு சொந்தமாக தோட்டத்து கிணறு உள்ளது. அங்கு கழிவு நீர் சேர்ந்து விட்டதால், கழிவுநீரை வெளியேற்றுவதற்காக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் கிணற்று நீரை பம்பு செட் மூலம் வெளியேற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்கள் கிணற்றுக்குள் தென்படவே உடனடியாக செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த செங்கோட்டை போலீசார் அந்த கிணற்று பகுதியில் மீண்டும் சிலரை விட்டு ஆய்வு மேற்கொண்ட போது கிணற்றுக்குள் ஏராளமான மோட்டார் சைக்கிளில் கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை வெளியே எடுத்தனர். மொத்தம் 8 மோட்டார் சைக்கிள்கள் சிக்கின. இதில் எக்ஸ்எல் சூப்பர் வகையைச் சேர்ந்தவை 3ம் மற்றவை 5 என மொத்தம் 8 இருசக்கர வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்களை யார் எதற்காக கொண்டு வந்து கிணற்றுக்குள் போட்டு விட்டு சென்றார்கள் என்பது குறித்து செங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வாகனங்கள் அனைத்தும் கடையநல்லூர், சாம்பவர் வடகரை, அச்சன்புதூர், கடையம், ஆய்க்குடி, ஆலங்குளம்,ஆகிய காவல்நிலைய பகுதிகளில் திருடப்பட்ட வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்களை திருடிய கும்பல் மேற்கண்ட பகுதிகளில் நடந்த கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்கு இந்த வாகனங்களை பயன்படுத்தி விட்டு பின்னர் இந்த கிணற்றில் கொண்டுவந்து போட்டு இருக்கலாம் என காவல்துறை சார்பில் சந்தேகிக்கப்படுகிறது.
கிணற்றிலிருந்து பைக்குகளாக வந்ததால் செங்கோட்டை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications