திருநெல்வேலியில் பிளஸ்-2 தேர்வு.. முதல் நாளே இப்படியா.. மாவட்ட கல்வி அதிகாரிக்கே பெரிய ட்விஸ்ட்
திருநெல்வேலி:பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் பாடத்துடன் நேற்று தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வு எழுத வரும் சில மாணவர்கள் காப்பி அடிக்கும் நோக்கில், கலர் ஜெராக்ஸ் எடுத்து வருவது, மினி ஜெராக்ஸ் எடுத்து வருவது போன்ற செயல்களை செய்வது நடக்கும். அந்த வகையில் தமிழ் பாடத்தேர்வுக்கே விடைகளை 'மினி ஜெராக்ஸ்' எடுத்து வந்துள்ளார்கள் திருநெல்வேலி மாணவர்களை.. அவர்களை முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் கையும் களவுமாக பிடித்து எச்சரித்துள்ளார். ஜெராக்ஸ் கடைகளையும் கடுமையாக எச்சரித்தார்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று (மார்ச் 2 ) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை இந்த ஆண்டு சுமார் 8,27,475 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7,99,692 பேர் பள்ளிகள் வழியாகப் பயிலும் மாணவர்கள் ஆவர். சுமார் 27,783 பேர் தனித்தேர்வர்களாக எழுதுகின்றனர். இதில் சிறைக்கைதிகள் 281 பேரும் அடங்குவர். பிளஸ் 2 தேர்வு எழுத மாநிலம் முழுவதும் மொத்தம் 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 7,545 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்.

நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தமிழ் பாடத்துடன் தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் 73 மையங்களில் 19,835 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தலைமையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தேர்வு பணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
ஒருசில பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தலைமையிலான பறக்கும் படையினர், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக பள்ளிக்கூட வளாகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பாக மாணவர்களை சோதனை செய்தனர். ஒருசிலர் 'பிட்' அடிக்கும் நோக்கத்தில் விடைத்தாள் மினி ஜெராக்ஸ் வைத்திருந்ததை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
அதாவது புத்தகம், கைடுகளில் உள்ள விடைகளை ஜெராக்ஸ் கடையில் கொடுத்து சிறிய அளவிலான 'மினி ஜெராக்ஸ்' எடுத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பறக்கும் படையினர் அந்த ஜெராக்ஸ்களை மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது, அந்த பகுதியில் உள்ள கடையில் ஜெராக்ஸ் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்தது மாணவர்களை எச்சரித்து தேர்வு எழுத அனுமதித்தனர். இதையடுத்து பறக்கும் படையினர் குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடைக்கு நேரடியாக சென்று கடுமையாக எச்சரிக்கை செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு ஜெராக்ஸ் கடையிலும் மாணவர்கள் பிட் அடிப்பதற்காக மினி ஜெராக்ஸ் போட்டு கொடுக்கக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர், இதை மீறினால் சம்பந்தப்பட்ட ஜெராக்ஸ் கடைகளில் மீது உரிய விசாரணைக்கு பிறகு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications