ஒப்பந்தத்தை மீறி அநீதி.. கூடங்குளம் அணுமின் நிலையத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம்!
திருநெல்வேலி: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைவதற்காக, அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தங்களது நிலங்களை கொடுத்துள்ளனர். நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த 1999ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்பட்டது.

மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இடம் அளித்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயமாக பணி வழங்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவும் இருக்கிறது.
இந்நிலையில் 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை புறக்கணிக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாளர்கள் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களை புறக்கணித்து நாளை நடத்தப்படும் தேர்வை அணுமின் நிலைய நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என கூடங்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாளை நடைபெற உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர் தேர்வை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அணுமின் உற்பத்திக் கழகம் மற்றும் இந்திய அணுசக்தி துறைக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியிருக்கிறார். ஒப்பந்த விதிகளுக்கு புறம்பாக நடக்க உள்ள சி பிரிவு பணியாளர்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பாவு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். உள்ளூர் மக்களை புறக்கணித்து நாளை நடத்தப்படும் தேர்வை அணுமின் நிலைய நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அணுமின் நிலைய தேர்வு மைய வளாகத்தை முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications